தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலையாமல் ஜே.என்.யூ. மாணவர்கள் மீண்டும் போராட்டம்- டெல்லியில் பதற்றம்!
Recommended Video
டெல்லி: கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) மாணவர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்ததனர். ஆனாலும் கலைந்து செல்லாத மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜே.என்.யூ.வில் வலதுசாரி மற்றும் தலித்- இடதுசாரி மாணவர்கள் அமைப்புகள் வலிமையாக இருக்கின்றன. இப்பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியவை. சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து ஜே.என்.யூ. மாணவர்களின் இருதரப்பும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து போராடும் தலித்- இடதுசாரி மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. கட்டணவு உயர்வு, உதவித் தொகைகள் நிறுத்தம் என அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டது.
2016-ல் ஹைதராபாத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை கண்டித்து ஜே.என்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தேசவிரோத முழக்கங்களை எழுப்பியதாக மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையாகுமார் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓய்ந்தது அயோத்தி பிரச்னை.. அடுத்தது சபரிமலைதான்.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
பல்கலை. விடுதியில் மாற்றங்கள்
டெல்லி பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டமானது ஜெய்பீம்- லால் சலாம் மற்றும் ஜெய் ஶ்ரீராம் முழக்கங்களால் ஒவ்வொரு முறையும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இம்முறை ஒட்டுமொத்தமாக பல்கலைக் கழக விடுதியில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அபராதம் அதிகரிப்பு
அதேபோல் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர் சங்க தலைவர்களுக்கான அபராதத் தொகை மிக கடுமையாக உயர்த்தப்பட்டது, மாணவர்களுக்கு உடை கட்டுப்பாட்டுகள் அமல்படுத்தப்பட்டன. இவை அனைத்தையுமே மாணவர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தாமலேயே பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது என்பது குற்றச்சாட்டு.
உதவித் தொகை விவகாரம்
மேலும் பல மாணவர்கள் இடஒதுக்கீடு மற்றும் உதவித் தொகைகள் மூலமும் ஜே.என்.யூ.வில் கல்வி கற்று வந்தனர். இவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் நிர்வாகம் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு, தனியாரிடம் விடுதி நிர்வாகங்கள் ஒப்படைப்பு, உதவித் தொகை நிறுத்தம் என புதிய விதிகளை அமல்படுத்தியது.
2 வாரங்களாக போராட்டம்
இதனால்தான் தாங்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது என்பது ஜே.என்.யூ. மாணவர்களின் கருத்து. இதையடுத்து அந்த மாணவர்கள் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு
அத்துடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கும் பல்கலைக் கழகத்தின் இன்றைய பட்டமளிப்பு விழாவை தாங்கள் புறக்கணிப்போம் எனவும் மாணவர்கள் அறிவித்திருந்தனர். இதனால் பரபரப்பு அதிகரித்தது.
|
மாணவர்கள் பெரும் போராட்டம்
இந்நிலையில் இன்று காலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார். அதை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
|
குண்டு கட்டாக கைது
அத்துடன் சில மாணவர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பல்கலைக் கழகத்துக்குள் குதிக்கவும் முயன்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் பங்கேற்றதால் அங்கு சி.ஆர்.பி.எப் படையினர் குவிக்கப்பட்டனர். போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து பல்கலைக் கழகத்துக்குள் மாணவர்கள் குதிப்பதை தடுத்தனர். மேலும் அவர்களை குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்துச் சென்றும் கைது செய்தனர்.
தண்ணீர் பீய்ச்சி கலைக்க முயற்சி
மாணவர்கள் போராட்டம் பல மணிநேரமாக தொடர்ந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.