பயந்து ஓடுகிறார்.. அமித்ஷா மட்டும் நாடாளுமன்றம் வந்தால் நான் மொட்டையடிக்க ரெடி- டெரெக் பகிரங்க சவால்
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றம் வந்து டெல்லி பலாத்கார சம்பவம் தொடர்பாக, அறிக்கை சமர்ப்பித்தால் தனது தலையை மொட்டையடிக்க ரெடி என்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் சவால் விடுத்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் டெரெக் ஓ பிரையன். இவர், இந்தியா டுடே டிவி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில முக்கிய விஷயங்கள்:
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடகம் நடத்தவில்லை. டெலிபிராம்டரை பார்த்து படிக்கும் ஒரு மன்னவன் இருக்கிறார். அவர்தான் பெரிய நாடகக்காரர். அவருக்கு இன்னும் ஆஸ்கர் கிடைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் மிகவும் தெளிவாக உள்ளன.
தலைவர் எழுதிய பாடல் எங்கேப்பா..? படத்திறப்பு விழா முடிந்ததும் முனுமுனுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள்..!
பெகாசஸ் உளவு
15-16 எதிர்க்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க விரும்புகிறோம். நாங்கள் மூன்று பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விரும்புகிறோம்: விவாதம் செய்து விவசாயச் சட்டங்களை ரத்து செய்யுங்கள், பொருளாதாரம், வேலைகள், விலை உயர்வு மற்றும் பணவீக்கம் பற்றி உரிய நடவடிக்கை தேவை; மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பெகாசஸைப் பற்றி விவாதிக்க வேண்டும். இவை மூன்றும்தான் எங்கள் கோரிக்கை.
நாடாளுமன்ற ஜனநாயகம்
நாங்கள் ஏற்கனவே ராஜ்யசபாவில் கொரோனா பற்றி விவாதம் செய்தோம். முட்டுக்கட்டை போடவில்லையே. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த பாஜக அரசு 11 சதவீத சட்ட மசோதாக்களை மட்டுமே மறு ஆய்வு செய்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சி நடந்தபோது இது 60-70 சதவீதமாக இருந்தது. அதாவது எதிர்க்கட்சிகள் குரல் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டு, சட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. குஜராத் முதல்வர் (மோடி) டெல்லிக்கு பிரதமராக வந்தபோது, அதை 25 சதவீதமாகக் குறைத்தார். இப்போது அவர் டெல்லியிலேயே குடியேறியதால், அது 11 சதவீதமாகிவிட்டது. 2016 ல் இருந்து எத்தனை கேள்விகளுக்கு மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்? ஒன்றுமில்லை. பாராளுமன்றத்திற்குள் உங்கள் சொந்த விதிகளை உருவாக்க விரும்புகிறீர்கள். ஆனால், ஜனநாயகப்படி, எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்புகின்றன.
எதிர்க்கட்சிகள் கருத்து
இந்தியாவின் அனைத்து இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மோடி அரசில், ஒரு மசோதாவுக்கு சராசரியாக ஏழு நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு அவைகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக தங்கள் கருத்தை சொல்ல இடம்தர வேண்டும். அரசாங்கம் அதன் பேச்சை கேட்க வேண்டும். ஆனால் மோடியும், அமித் ஷாவும் இதைப் புரிந்து கொள்ளவில்லை.
காணாமல் போய் விட்ட அமித் ஷா
நாம் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்தால், காணாமல் போனவர் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாராளுமன்றத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சரை நான் பார்க்கவில்லை. பாராளுமன்றத்தில் இந்திய பிரதமரை நான் பார்க்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியுமா? டெல்லி போலீஸ் கமிஷனராக தனக்கு பிடித்த அதிகாரியை அமித் ஷா நியமித்தார். ஆனால் டெல்லியில் 9 வயது தலித் பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி உள்துறை அமைச்சர் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாமா?
மொட்டையடிக்க ரெடி
அமித் ஷா நாளை ராஜ்யசபா அல்லது லோக்சபாவுக்கு வந்து, இந்த 9 வயது தலித் பெண் டெல்லியில் ஏன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று அறிக்கை வழங்கினால், உங்கள் நிகழ்ச்சியிலேயே, நான் தலையை மொட்டையடித்துக் கொள்கிறேன். அமித் ஷாவுக்கு நான் சவால் விடுகிறேன், ஏனென்றால் அவர் பெகாசஸ் விவகாரத்திலிருந்து தப்பிக்க நாடாளுமன்றத்திற்குள் வராமல் ஓடிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார்.