சூடு பிடிக்கிறது காங். தலைவர் பதவி தேர்தல்- அசோக் கெலாட், சசி தரூரை தொடர்ந்து திக்விஜய்சிங் போட்டி?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட், சசி தரூரைத் தொடர்ந்து மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. செப்டம்பர் 30-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 19-ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிருப்தியாளர்கள் சார்பாக சசி தரூர் களம் காண்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தியை அசோக் கெலாட் இன்று சந்தித்தார். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சி தலைமை செயலகம் சென்ற சசி தரூர், வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அசோக் கெலாட், சசி தரூர் இடையே மட்டுமே போட்டி என்றிருந்த நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கும் களத்தில் குதித்துள்ளார். என்னை மட்டும் ஏன் போட்டியில் இருந்து விலக்கி வைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார் திக்விஜய்சிங். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவக் கூடும்.
அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடுபிடிக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்! சோனியா கிரீன் சிக்னல்.. பின்னணி
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திக்விஜய்சிங், செப்டம்பர் 30-ந் தேதி மாலைதான் யார் யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்? என்பது தெரியவரும். இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு காங்கிரஸ் தலைவருக்கும் உரிமை உண்டு. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறைதான் வாக்கெடுப்பு மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட மாநில நிர்வாகிகள் 10 பேர் வேட்புமனுவில் கையெழுத்திட வேண்டும். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சுமார் 9,000 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் அவர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. ஆனால் அசோக் கெலாட்டோ தாம் இரு பதவிகளையும் வகிப்பேன் என அடம் பிடித்துவருகிறார். இதனால் ஒருவருக்கு எத்தனை பதவி என்கிற விவாதமும் காங்கிரஸில் களை கட்டியிருக்கிறது.