ஏகலைவா பள்ளிகளில் 38000 ஆசிரியர்கள் நியமனம்..பழங்குடியினர் வாழ்க்கை தரம் உயர 15,000 கோடி நிதி
நாடு முழுவதும் வீடு சுகாதார வசதியை அனைத்து பழங்குடியினருக்கும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் 748 ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38.800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என டெல்லியில் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிப்பதுடன், ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24 ஆம் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 15000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஏகலைவா பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தேசிய பழங்குடியினர் நல கல்விச்சங்கத்தின் கீழ் பழங்குடியினருக்காக 392 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் ஆங்கில வழியில் தரமான கல்வியும், ஊட்டச்சத்து மிக்க உணவும், விளையாட்டு மற்றும் கலாச்சார பிரிவுகளில் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப்பள்ளிகள் நாட்டில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அமைக்கப்படுவதுடன் நாட்டின் தொலை தூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை, சேலம் மாவட்டம் - அபிநவம் மற்றும் ஏற்காடு. நாமக்கல் மாவட்டம் செங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் - அத்திப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் - புதூர்நாடு, நீலகிரி மாவட்டம் - மு.பாலடா மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - குமிழி ஆகிய இடங்களில் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2606 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நாடு முழுவதும் ஏகலைவா பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் பட்ஜெட் உரையை வாசித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் புதிதாக 748 புதிய ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளை அரசு கட்டும் என்று அறிவித்தார். ஏகலைவா பள்ளிகளில் மொத்தம் 38,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பழங்குடியின மாணவர்களின் சிறந்த கல்விக்காக இந்த பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.