ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - அறிவித்தது தேர்தல் ஆணையம்
டெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கான வேட்புமனுவை ஜூலை 5ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூலை 19 கடைசி நாள் என்றும், தேர்தல் நடைபெறும் ஆகஸ்ட் 6 ஆம் தேதியே முடிவுகளும் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் வெங்கய்யா நாயுடுவே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதை தொடர்ந்து ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவும் துணைத் தலைவராக யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.












Click it and Unblock the Notifications