பேஸ்புக்கை பாஜக ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறதா? ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
டெல்லி: இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாகவும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பதிவிடும் வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்குவது இல்லை என்றும் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
facebooks Hate-Speech Rules Collide With Indian Politics என்ற பெயரில் எழுதப்பட்ட கட்டுரையில் இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் சில முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக இதில் கூறப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக்.. வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை!
ராகுல் காந்தி ட்விட்
இந்த பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்த ராகுல் காந்தி, அந்த பதவில். இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார். சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்றும் கூறியிருந்தார்.
ராகுலுக்கு பதிலடி
இதற்கு பாஜக மூத்த தலைவரும் , மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில் "மக்களிடம் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரிடம் கூட தோற்றுப்போனவர்கள், மொத்த உலகத்தையும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் கட்டுப்படுத்தப்படுவதாக கூச்சலிடுகிறார்கள்.
உங்களுக்கு என்ன தகுதி
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி வைத்து நீங்கள் தேர்தலுக்கு முன்னர் அதன் தரவை பயன்படுத்தி சிக்கிய உங்களுக்கு.. இப்போது எங்களை கேள்வி கேட்க தகுதி இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தைரியம் உள்ளதா?
மேலும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனது பதிவில், 'உண்மை என்னவென்றால், இன்று தகவல் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அணுகல் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது. இது இனி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் அது வலிக்கிறது. பெங்களூர் கலவரத்திற்கு இதுவரை நீங்கள் கண்டனம் செய்தீர்களா? இதுவரை அதைபற்றி கேட்கவில்லை. இந்த விஷயத்தில உங்கள் தைரியம் எங்கே மறைந்தது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.