சக்கா ஜாம்: டெல்லி தவிர நாடு முழுவதும் ஸ்தம்பிக்க செய்ய விவசாயிகள் அழைப்பு
டெல்லியில் எதையும் செய்யப் போவதில்லை, அங்குள்ள மன்னர் அதை ஏற்கனவே பலப்படுத்தியுள்ளார், இப்போது நாங்கள் முற்றுகை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகைட் கூறியுள்ளார்.
டெல்லி: வேளாண் மாசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரில் 72 நாட்களாக போராடி வரும் விவசாயிகள், பிப்ரவரி 6ஆம் தேதி நாடு முழுவதும் சக்கா ஜாம் எனப்படும் முற்றுகை போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லியை எதுவும் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ள விவசாயிகள், நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
பாஜக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 72 ஆவது நாளாக நீடிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தங்களது குரலை கொடுத்துள்ளனர். இதற்கு மத்திய அரசும், பாஜக ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் கடன்கள் ரத்து
ஹரியானா மாநிலம் சின்க் மாவட்டம் கண்டினு கிராமத்தில் விவசாய சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்கள் ரத்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை காண சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை செயல்படுத்துவது, வேளாண் கடன்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் கைது
டெல்லியில் குடியரசு தினத்தில் நடைபெற்ற வன்முறைகளை அடுத்து விவசாய சங்கத்தினர் ஏராளமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதையும் கொடுக்கவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய பாரதி கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைட், எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டு கலைஞர்கள் யார். சில வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தால் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது.
அவர்கள் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை அல்லது எதையும் பறிக்கவில்லை என்று கூறினார்.

ஸ்தம்பிக்க செய்வோம்
நாளை பிப்ரவரி 6ஆம் தேதி சக்கா ஜாம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த முற்றுகை டெல்லியில் செய்யப்படாது, ஆனால் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மற்றும் தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார் ராகேஷ் திகைட்.

எதுவும் இயங்காது
பிற்பகல் 3 மணிநேரம் இந்த சக்கா ஜாம் நடைபெறும். அந்த நேரத்தில் எதுவும் இயங்காது. டெல்லியை எதுவும் செய்ய மாட்டோம் என்று தெரிவித்த ராகேஷ் திகைட், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்ணீரும் உணவும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்
விவசாயிகளுடன் அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. சாலைகளில் ஆணிகளை பதித்தும் முள்கம்பி வேலிகளை போட்டும் பல அடுக்கு தடுப்பு அரண்களை டெல்லி காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். தடுப்புகளை அகற்றும் வரையில் பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். தீவிரமடையும் விவசாயிகள் போராட்டத்தினால் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications