4 மாநிலங்களில் வெற்றி-ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே சாதகம்:எதிர்க்கட்சிகளின் வியூகம் அவுட்- எப்படி?
டெல்லி: நான்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெல்லும் சாத்தியங்கள் உள்ளன. மேலும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தொடக்க நிலையிலேயே முடிவுக்கும் வந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ந் தேதி நிறைவடைகிறது. இதனால் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
4 மாநிலங்களில் ஆட்சியமைக்கும் பாஜக..உ.பி.யில் 50 இடங்களை இழந்தது.. மீண்டெழுந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலானது எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் மறைமுக வாக்குகள் மூலம் நடைபெறும். தற்போதைய நிலையில் லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை 233; ராஜ்யசபா எம்.பிக்கள் எண்ணிக்கை 543; அனைத்து மாநிலம்/ யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 4120. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஒரு எம்.பியின் வாக்கு 708 மதிப்பு கொண்டது. எம்.எல்.ஏக்களின் வாக்குகள் மாநிலங்களின் அடிப்படையில் கூடுதலாக, குறைவாக இருக்கும். எம்.எல்.ஏக்களின் வாக்குகள் சராசரியாக 208 என்ற மதிப்பு கொண்டது. இதனடிப்படையில் தற்போது எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் மதிப்பு மொத்தமாக சுமார் 11 லட்சமாக உள்ளது. இதில் ஜனாதிபதி வேட்பாளர் 50% வாக்குகளைப் பெற வேண்டும்.
பாஜக நிலவரம்
5 மாநில தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவுக்கு சுமார் 4.5 லட்சம் வாக்குகள் இருந்தன. அதாவது 5 மாநில தேர்தலுக்கு முன்பு வரை பாஜகவுக்கு 398 எம்.பிக்கள், 1,500 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதனால் பாஜக, ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை நிறுத்தினாலும் மாநில கட்சிகள் சிலவற்றின் ஆதரவை பாஜக பெற வேண்டிய நிலை இருந்தது.
எதிர்க்கட்சிகள் வியூகம்
இதனடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்கிற வியூகத்தை வகுத்திருந்தன. ஜனாதிபதி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்தலாம் என்பது பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருந்தன. மேலும் 5 மாநில தேர்தல்களில் உ.பி. சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமாக இருந்தால் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி பாஜகவுக்கு நெருக்கடி தரலாம் என்பதும் எதிர்க்கட்சிகளின் திட்டமாக இருந்தது.
தேர்தல் முடிவுகளால் நிலவரம் மாறியது
ஆனால் 5 மாநில தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி தேர்தல் நிலைமையை தலைகீழாக்கிவிட்டது. 5 மாநில தேர்தல்களில் 4-ல் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநில எம்.எல்.ஏக்களின் மொத்த மதிப்பு 83,824. பஞ்சாப் எம்.எல்.ஏக்களின் மொத்த மதிப்பு 13,752. உத்தரகாண்ட் மதிப்பு 4480; கோவா-800; மணிப்பூர் 1080 ஆகும். இப்போது பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியை அறுவடை செய்திருப்பதால் பிற கட்சிகளின் தயவின்றி ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இது எதிர்க்கட்சிகளின் வியூகத்துக்கு தொடக்கத்திலேயே பெரிய பின்னடைவாகிவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.