பிளேக் தொற்று...மக்களுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம்...இன்றும் பொருந்துகிறது!!
டெல்லி: மகாத்மா காந்தியடிகள் பிளேக் தொற்று ஏற்பட்டு இருந்தபோது தென் ஆப்ரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் வசித்து வந்தார். அப்போது அவர் இந்த நோய் குறித்து இந்திய ஒப்பீனியன் பத்திரிகையில் 1905, ஜனவரி 16ஆம் தேதி விழிப்புணர்வு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், இந்த தொற்று மறைவதுபோல் தோன்றினாலும் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.
ஜோஹன்னஸ்பர்க்கில் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரே நேரில் சென்று சிகிச்சை அளித்து இருந்தார். இந்தியர்களும் பாதிக்கப்பட்டு இருந்தனர். தினமும் சுமார் 20 கி. மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணித்து சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் எழுதி இருந்த எச்சரிக்கை கடிதத்தில், ''மீண்டும் தொற்று ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் அரசு அவர்களை துன்புறுத்தும் என்று கருதக் கூடாது.
- காய்ச்சல் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டால் அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்
- உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
- அச்சம் இன்றி எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்
- பிளேக் நோயாளியுடன் தொடர்பு ஏற்பட்டு இருந்தால் அதை மறைக்காமல், ஆடைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- எந்த ஒரு காரணம் கொண்டும் படுக்கை அறையை கடையுடன் இணைக்கக் கூடாது
- வீட்டில் வைத்து பொருட்களை விற்பதற்கு இருப்பு வைக்கக் கூடாது
- ஒவ்வொருவரின் வீட்டிலும் விளக்கு நன்றாக எரிய வேண்டும். காற்றோட்டம் இருக்க வேண்டும்
- வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து தூங்க வேண்டும்
- பகல் மற்றும் இரவு நேரங்களில் அணியும் ஆடைகளை சுத்தமாக துவைக்க வேண்டும்
- ஜீரணிக்கும் வகையில் அளவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
- அதிக உணவு எடுப்பதை தவிர்க்க வேண்டும்
- ஒவ்வொருவரும் மலம் கழித்த பின்னர் சாம்பல், மணல் போட்டு வைக்க வேண்டும். இரவு நேரம் மலம் கழித்து இருந்தால் அதில் ஈக்கள் செல்வதைத் தவிர்க்க மணல் போட்டு வைக்க வேண்டும்
- கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்கும் இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும்
- சுடுநீரில் கிருமி நாசினி கலந்து வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்
- தொற்று பாதிப்பு இருக்கும் இடத்தில் பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்து செல்வதோ, பயன்படுத்துவதோ கூடாது
- சாதாரண நிலையிலும் ஒரு அறையில் இருவருக்கு மேல் படுக்கக் கூடாது
- சமையல் அறையில், வீட்டின் வரவேற்பு அறையில் யாரும் படுக்கக் கூடாது
- எலிகள் நெருங்காதவாறு உணவுகளை வைக்க வேண்டும். சுவற்றில் சிமென்ட் பூச வேண்டும். இல்லை என்றால் எலி துளைத்து விடும்
- வீட்டிலேயே முடங்கி இருக்காமல், வெளியே சென்று காற்றை சுவாசிக்க வேண்டும். சில மைல் தூரம் நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அப்போதே காந்தி எழுதி இருக்கிறார். இதில் என்ன ஒற்றுமை என்றால், பிளேக் ஏற்பட்டபோது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்ததோ அவற்றை இன்றும் மக்கள் கொரோனா தொற்று காலத்தில் பின்பற்ற வேண்டும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.