இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- கேரளாவில் ஒரே நாளில் 21,613 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 35,197 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்டவற்றில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சட்டென குறைவதும் திடீரென அதிகரிப்பதுமாக உள்ளது.
இந்தியாவில் திங்கள்கிழமையன்று 15,63, 985 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 154 நாட்களில் பதிவான மிக குறைவான கொரோனா பாதிப்பு இது. நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் 23% குறைவு இது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,50,679 ஆக அதிகரித்தது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் எண்ணிக்கை 49,66,29, 524.
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு: 1,06,170 பேருக்கு தொற்று; 835 பேர் பலி
இந்தியாவில் அதிகரிப்பு
இந்நிலையில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று 35,197 ஆக அதிகரித்தது. கொரோனாவால் ஒரே நாளில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37.136 ஆகவும் இருந்தது. நாட்டில் செவ்வாய்க்கிழமையன்று கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 440.
கேரளாவில் அதிக பாதிப்பு
நாட்டில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 21,613 ஆகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 127 ஆகவும் இருந்தது. கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் 116 பேர் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை 1,804. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 32. கர்நாடகாவில் நேற்று மட்டும் 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்திலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 32 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் 1063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆந்திராவில் 11 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
வடகிழக்கு மாநிலங்களிலும் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இம்மாநிலத்தில் 6 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர். ஒடிஷாவில் 720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது; மொத்தம் 68 பேர் இம்மாநிலத்தில் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். அஸ்ஸாமில் 741 பேருக்கு தொற்று உறுதியும் 11 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மணிப்பூரில் 403 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 6 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமை தொடர்ந்து மிசோரமில் கொரோனா பாதிப்பு நீடிக்கிறது. இங்கு 639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிக்கிமில் 104 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இமாச்சல பிரதேசத்தில் நேற்று 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் தற்போதைய நிலையில் 3,61,446 பேருக்கு கொரோனா சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) அளிக்கப்பட்டு வருகிறது.