இந்திய ரயில்வே 'வாவ்' அறிவிப்பு.. அனைத்து சேவைகளுக்கும் '139'.. அதுவும் 12 மொழிகளில்
டெல்லி: உண்மையில் இந்திய ரயில்வே ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனலாம். ரயில்வேயில் அனைத்து வித விசாரணைகள், புகார்கள், பயணத்தின் போதான தேவைகள் போன்றவற்றுக்கு ஒரே தொலைபேசி உதவி எண்ணாக '139' அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே ஹெல்ப்லைன் '139' எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய எண்ணாகும். சராசரியாக, ஒரு நாளுக்கு மட்டும் 3,44,513 அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பதிவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், அனைத்து வித சேவைகளுக்கும் இந்த 139 எனும் எண்ணை ஒருங்கிணைத்துள்ளது இந்திய ரயில்வே.
இதுதொடர்பாக ரயில்வே வௌியிட்ட செய்திக்குறிப்பில், பயணிகள் தங்கள் பயணத்தின் போது ஏற்படும் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல தொலைபேசி எண்களில் பேசவேண்டியுள்ள சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து தொலைபேசி உதவி எண்களும் '139' என்ற ஒரே எண்ணில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உடனுக்குடன் குறைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்த 139 எனும் தொலைபேசி உதவி எண் சேவை, 12 மொழிகளில் கிடைக்கும். இதில் ரயில் பயணிகள், ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையை பயன்படுத்தலாம். மேலும், ஸ்டார் பட்டனை (asterisk) அழுத்துவதன் மூலம், ரயில்வே கால் சென்டர் அலுவலரை நேரடியாக தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.
இந்த தொலைபேசி உதவி எண்ணை அழைக்க ஸ்மார்ட்போன்தான் வேண்டும் என்பதில்லை, அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்.
139 தொலைபேசி உதவி எண்ணில், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை அழுத்த வேண்டும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
- எண் 1 - பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணை அழுத்தினால், கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பு கிடைக்கும்.
- எண் 2 - PNR Status, ரயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, தூக்கத்தில் இருந்து பயணிகளை எழ வைக்க உதவும் அலாரம் (wake up alarm facility), உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை.
- எண் 4 - பொதுவான புகார்கள்.
- எண் 5 - லஞ்சம் தொடர்பான புகார்கள்.
- எண் 6 - பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகள்.
- எண் 7 - ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரயில்கள் தொடர்பான விசாரணைகள்.
- எண் 9 - பதிவு செய்யப்பட்ட புகார் குறித்த நிலை (Status Of Staus) அறிய.
* (Star பட்டன்) - கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேச.
இந்த ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, 'ஒரே ரயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139' என்ற சமூக ஊடக பிரசாரத்தையும் ரயில்வே அமைச்சகம் துவக்கியுள்ளது.