நுபுர் பற்றி அஜித் தோவல் சொன்னது என்ன? "அந்த" வாக்கியத்தை அப்படியே நீக்கிய ஈரான்! என்னங்க நடக்குது?
டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாக வெளியான சில கருத்துக்களை ஈரான் தங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கி உள்ளது.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா, சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகளை கடுமையாக இகழ்ந்து சில கருத்துக்களை நுபுர் சர்மா வைத்து இருந்தார்.
இவரின் கருத்துக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் விளக்கமும் கேட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரானும் இந்தியாவிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டது.
நபிகள் நாயகம் குறித்த அவதூறு: கொந்தளிக்கும் அரபு நாடுகள்.. இந்தியாவிடம் கேள்வி எழுப்பிய ஈரான் அரசு
ஈரான்
இந்த பிரச்சனைகளுக்கு இடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹியன் இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், மற்றும் சில வெளியுறவுத்துறை நிர்வாகிகள் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். இரண்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்தனர். இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்தும், எண்ணெய் வர்த்தகம் குறித்தும் இவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தியா வருகை
இந்த சந்திப்பில் பிரதமர் மோடியை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு நாட்டு உறவு மேம்ப்பட்டு உள்ளது. மத உணர்வுகளை மதிப்பதாகவும், இஸ்லாமிய உணர்வுகளை மதிப்பதாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க மாட்டோம் என்றும் இரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன. இதனால் இரண்டு நாட்டு உறவு கண்டிப்பாக மேம்படும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
என்ன சொன்னார்?
இதையடுத்து ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், அஜித் தோவலுடன் நடந்த சந்திப்பில், தவறு செய்தவர்கள் (நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால்) ஆகியோர் கண்டிப்பாக தண்டிக்க படுவார்கள். அரசு மட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் பாடமாக அமையும், என்று அஜித் தோவல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உறுதி அளித்ததாக கூறப்பட்டது. அதாவது அஜித் தோவல், நுபுர் சர்மாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக ஈரான் குறிப்பிட்டு இருந்தது.
அஜித் தோவல்
ஆனால் இந்த கருத்தை தற்போது ஈரான் நீக்கி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாக வெளியான சில கருத்துக்களை ஈரான் தங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. அதாவது நுபுர் சர்மா போன்ற தவறு செய்தவர்களுக்கு பாடம் புகட்டப்படும் என்று அவர் கூறியதாக ஈரான் வெளியிட்ட கருத்துக்களை ஈரான் வெளியுறவுத்துறை நீக்கி உள்ளது. அஜித் தோவல் இப்படி கூறியதாக வெளியான செய்திகள் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.