இது பட்ஜெட்டா? இல்லவே இல்லை.. மளிகை கடைக்காரரின் பில்.. நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய சு.சாமி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை மளிகை கடைக்காரரின் பில் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளார். அதாவது இது பட்ஜெட் இல்லை. மளிகை கடைக்காரரின் பில் என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் சாதனைகள் பற்றிய விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு இருந்தார்.
விஸ்வகர்மாக்கள்..வலிமையான பொருளாதாரம்..அருமையான பட்ஜெட்..நிர்மலா சீதாராமனை பாராட்டிய மோடி
ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை
அதன்படி 50 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கும் காலம் மேலும் ஓராண்டு தொடரும் என அறிவித்தார். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை ஈர்க்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். மேலும் புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை சம்பளம் அல்லது வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
உலக பொருளாதாரத்தில் 5ம் இடம்
மேலும் இதுபோன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதோடு உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சுப்பிரமணியன் சாமி விமர்சனம்
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது பட்ஜெட் அல்ல. இது மளிகை கடைக்காரரின் பில் என அவர் சாடியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மளிகை கடைக்காரரின் பில்
இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகை கடைக்காரர் ஒருவரின் பில்லாக உள்ளது. சரியான பட்ஜெட் என்பது நாட்டின் குறிக்கோள்கள் என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன? என்ன என்பதை கூற வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்து காட்ட வேண்டும்'' என விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி-கார்கே கருத்து
முன்னதாக இந்த பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்து இருந்தார். இதுபற்றி பிரதமர் மோடி , ‛‛வலுவான இந்தியாவை கட்டமைக்க இந்த பட்ஜெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்த பட்ஜெட் பெரும் பங்காற்றும். அனைத்து துறை எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது'' என தெரிவித்து இருந்தார். மாறாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பட்ஜெட்டை விமர்சனம் செய்திருந்தார். ஏழை, எளிய மக்களின் நலனுக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்திருந்தார்.