யாரையும் சஸ்பெண்ட் செய்யல.. டெல்லி கமிஷ்னருக்கு பணி நீட்டிப்பு.. ஏன் இப்படி.. ப சிதம்பரம்
டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நேற்று போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கோபால் என்ற நபர் நேற்று திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்துவதற்காக துப்பாக்கியுடன் கோபால் ஆவேசத்துடன் ஓடி வந்த போது அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த ஏராளமான டெல்லி போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாணவர்கள் உதவிக்கு அழைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த கோபாலை போலீசார் தடுக்க முயற்சி செய்யவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்தே அந்தநபரை போலீசார் பிடித்துச் சென்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவமும், போலீசார் நடந்து கொண்ட விதமும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட் பதிவில், "டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்ட இடத்திலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. அன்றைய நாளிலேயே டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்துள்ளது. புரிந்து கொள்ள முடியாது. கண்டிக்கத்தக்கது. ஒரு பக்கம் நீட்டிப்பு கிடைத்துள்ளது. மறுபக்கம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்காக யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications