ஜேஇஇ மெயின் தேர்வு...முதல் 3 நாட்களில் 25% பேர் ஆப்சென்ட்...வேண்டான்னா கேக்கலையே!!
டெல்லி: கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே மத்திய அரசு ஜேஇஇ தேர்வு நடத்திய முதல் மூன்று நாட்களில் மட்டும் 114,563 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 458,521 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்தத் தகவலை மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஜெஇஇ மெயின் நுழைவுத் தேர்வு துவங்கியது. தேர்வு துவங்குவதற்கு முன்பே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், முதல் மூன்று நாட்கள் நடந்த தேர்வில் 25 சதவீதம் பேர் கொரோனா அச்சத்தின் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் மொத்தம் 343,958 பேர் தேர்வு எழுதி இருக்க வேண்டும். ஆனால், முதல் நாளில் 54.67 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர். இரண்டாம் நாளில் 81 சதவீதம் பேரும், மூன்றாம் நாளில் 82 சதவீதம் பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலுக்கு இடையே துவங்கி இருக்கும் ஜெஇஇ மெயின் தேர்வு வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. நடப்பாண்டில் 570ல் இருந்து 660 ஆக தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஒரு அறையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, சானிடைசர், மாஸ்க் வழங்கப்பட்டு, உள்ளே வருவதற்கு, வெளியேறுவதற்கு என்று வேறு வேறு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தும், மாணவர்களின் வருகை குறைந்துள்ளது.
இதுகுறித்து பதில் அளித்து இருக்கும் தேசிய தேர்வு முகமை, ''தேர்வு மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுக்கு பதில் பார்கோட் சரிப்பாக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
ஐஐடி, என்ஐடி, சிஎப்டிஐ ஆகியவற்றில் சேருவதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். ஒடிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் தேர்வு எழுதுவதற்காக தங்களது மாணவர்களுக்கு வாகன ஏற்பாடுகளை செய்து கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தன. இத்துடன் ஐஐடி முன்னாள் மாணவர்களும் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு வாகன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தனியாக ஒரு இணையதளம் அமைத்து அறிவித்து இருந்தனர். ஐஐடி அட்வான்ஸ் தேர்வு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்கிறது.












Click it and Unblock the Notifications