ரூ50 லட்சம் லஞ்சம்... 250 சீனர்களுக்கு சட்டவிரோத விசா - கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு!
டெல்லி: இந்தியாவுக்கு சீன நாட்டவர்கள் 250 பேர் வருவதற்கு சட்டவிரோதமாக விசாக்கள் கிடைக்க உதவியதாக காங்கிரஸ் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான சென்னை, டெல்லி உள்ளிட்ட வீடுகளில் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்தான் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்யபப்ட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்குக்காக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே பல முறை சோதனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 250 சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இவர்கள் இந்தியாவில் பணிசெய்வதற்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத் தந்தார் கார்த்தி சிதம்பரம்; இதற்காக ரூ50 லட்சம் லஞ்சம் பெற்றார் என புதிய வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில்தான் இன்று சிபிஐ சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தியது. பஞ்சாப்பில் சீனர்கள் பணி செய்வதற்காக சட்டவிரோதமாக விசாக்களை கார்த்தி சிதம்பரம் பெற்று தந்தார் என்கிறது இந்த வழக்கு. மேலும் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் கருத்து
இச்சோதனை தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இன்றைய சோதனைக்கான முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இடம்பெறவில்லை. இன்றைய சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை. டெல்லி, சென்னை வீடுகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன என்றார்.
செல்வபெருந்தகை கருத்து
இந்த சோதனை தொடர்பாக தமிழக சட்டசபை குழு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், இதுபோன்ற சோதனைகள் நடத்துவது ஏன் என்று தெரியவில்லை. பழிவாங்கும் நோக்கில் சிபிஐ சோதனை நடத்தபப்ட்டு வருகிறது. சாதாரணமான சோதனைதான் என அதிகாரிகள் கூறுகின்றனர் என்றார்.