முல்லைப் பெரியாறு அணை விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் கேரளா எம்.பிக்கள் போராட்டம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
முல்லைப் பெரியாறு அணை 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை உள்ள இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசுதான் பராமரித்து வருகிறது.
முல்லை பெரியாறு பிரச்சனை என்ன?
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்க முடியும். ஆனால் கேரளா இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான பல்வேறு வழக்குகளுக்குப் பின்னர் தற்போதைய நிலையில் 142 அடி வரைதான் நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
கேரளாவின் பிடிவாதம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வும் நடத்தினார். அதேநேரத்தில் அணை கட்டி 200 ஆண்டுகள் ஆகிவிட்டது; அதனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது; இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட அனுமதிக்க வேண்டும் என்கிறது கேரளா.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அணையைப் பார்வையிட்டு முல்லைப் பெரியாறு அணை வலுவாகத்தான் இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதில் கேரளா பிடிவாதம் காட்டி வருகிறது. இது தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணையில் இருக்கிறது.
கேரளா எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும்; முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளுடன் கேரளா எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தமது ட்விட்டர் பக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை நிரம்பி ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. ஆகையால் தற்போதைய அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.