வட்டிக்கு வட்டி.. காமத் குழு பரிந்துரை என்னாச்சு? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
டெல்லி: வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்களின் வட்டிக்கு வட்டி போடுவது தொடர்பாக கே.வி.காமத் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று உள்ளதா? இல்லையா என்பதை தெளிவுபடுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளுக்கு வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மாதாந்திர கடன் தொகையை ஆகஸ்டு 31ஆம் தேதி வரை, ஆறு மாத காலத்திற்கு, ஒத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் ஒத்திவைத்த தொகைக்கு வங்கிகள் வட்டி வசூலித்தன.
எனவே, கடன் ஒத்திவைப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்று வாடிக்கையாளர்கள் புலம்ப ஆரம்பித்தனர். இது தொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

அதிருப்தி
இந்த வழக்கு கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வரி விதிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இன்று மறுபடி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் போதிய விவரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

காமத் குழு
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல வங்கியாளர் கே.வி.காமத் தலைமையில், ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்தது. அதிகப்படியாக கடன் வாங்கியவர்களுக்கான கடன் ஒத்திவைப்பு தொடர்பாக சிபாரிசு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி அந்தக் குழுவிடம் கேட்டுக் கொண்டது. இந்த குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில் அறிக்கையின் அம்சங்கள் பொதுவெளிக்கு வரவில்லை.

சரமாரி கேள்விகள்
இந்த விவகாரம் பற்றி உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், காமத், கமிட்டியின் அறிக்கை தொடர்பாக எந்த அம்சமும் இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த அறிக்கை ஏற்கப்பட்டதா, இல்லையா என்பது பற்றி இதில் எந்த விளக்கமும் இல்லை. இதை பொதுவெளியில் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆணை வெளியிட்டீர்களா
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின் போது, காமத் கமிட்டி கொடுத்த பரிந்துரை ஆவணப்படுத்தப்படும். இதில் மறைப்பதற்கு எந்த விஷயமும் கிடையாது என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறிக்கையை ஆவணப்படுத்துவது அல்லது அதை அறிவிப்பது விஷயம் கிடையாது. அறிக்கையை அமல்படுத்துவதுதான் முக்கியம். மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி ஆகிய யாரும் இதுவரை வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்பது பற்றிய அறிவிப்பை ஆணையாகவோ அல்லது சுற்றறிக்கையாகவோ வெளியிடவில்லை. அதை நீங்கள் முதலில் செய்ய வேண்டும். அப்போதுதான் பொது மக்களுக்கு சலுகை நீட்டிக்கப்பட்டது தெரியவரும், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தவறான புள்ளி விவரம்
மேலும், ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தின் போது, அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் நிறைய புள்ளிவிவரங்களும் உண்மைகளும் எந்த அடிப்படையும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு 6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதி அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது முற்றிலும் தவறானது என்று தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறை
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம்.., கபில் சிபல் கூறியதில் உண்மை இருக்கிறது என்று தனது வாதத்தின் போது குறிப்பிட்டார். மத்திய அரசின் பிரமாண பத்திரத்திற்கு பதில் வழங்குவதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து ரியல் எஸ்டேட் துறைக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை. கடன் மறு சீராக்கம் பற்றிய எந்த ஒரு சலுகையும் ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கப்படவில்லை என்று வாதம் முன் வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை ஒரு வாரம் கழித்து தாக்கல் செய்ய வேண்டும், அனைத்து தரப்புமே, அன்றைய தினத்திற்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications