மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பானுடன் ஒப்பந்தம்; 2026-ல் முடிவடையுமாம்- மத்திய அரசு
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த கட்டுமானப் பணிகள் 2026-ல் நிறைவடையும் என்றும் நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மொத்தம் ரூ.1,464 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறினார். ஆனாலும் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில் 2020-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரித்துள்ளது என்றது மத்திய அரசு.

ஒற்றை செங்கல்லும் உதயநிதியும்
அதேநேரத்தில் பஞ்சாப், அஸ்ஸாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என தமிழகம் முழுவதும் ஒற்றை செங்கல்லுடன் பிரசாரம் செய்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் அந்த ஒற்றை செங்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசு அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

மத்திய அரசு பதில்
இந்த நிலையில் லோக்சபாவில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என கூறினார்.

தென் தமிழ்நாடு ஏமாற்றம்
அதேநேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசு தெளிவுபடுத்தப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகள் அடுத்த ஆண்டுதான் தொடங்க உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அரசு தரப்பில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை என்பதால் தென்தமிழ்நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications