"நிலைமை மோசம்.. பலர் இன்னும் போர் பகுதிகளில் சிக்கியுள்ளனர்.." தாயகம் திரும்பிய மாணவர்கள் பேட்டி
டெல்லி: உக்ரைனில் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், போர் இன்னும் முடியவில்லை
ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கியது பேச்சுவார்த்தை.. போர் நிற்குமா.. உலகமே எதிர்பார்ப்பு
மாற்று வழிகள்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்தப் போர் காரணமாக ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை உக்ரைன் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிறப்பு விமானம்
ஏற்கனவே, ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காகச் சிறப்பு விமானங்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவித்த 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் இருந்து ஆறாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமான நிலையத்தில் இந்தியர்களை வரவேற்றார்.
போர்ப் பகுதிகளில் இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் இருந்து டெல்லியில் இருந்து மாணவிகள் பேசுகையில், "அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சரியா செய்யப்பட்டு இருந்தது. நாங்கள் அங்கே இருந்த போது எங்கள் குடும்பத்தினர் கவலையடைந்தனர், எங்களைப் பாதுகாப்பாக உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற்றி, தாயகம் அழைத்து வந்த இந்திய அரசுக்கு நன்றி. அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. பல மாணவர்கள் இன்னும் போர்ப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்
தற்போது பெலராஸ் நாட்டில் உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதலைத் தற்காலமாக நிறுத்தி உள்ளனர். தரைவழியாக வெளியேறும் மாணவர்கள் நேரடியாக எல்லைக்கு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. எல்லையோரம் இருக்கும் ஊர்களில் காத்திருக்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர்கள் கூறிய பின்னரே எல்லையைக் கடக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.