மோடி அரசின் லட்சிய திட்டமான பாரத்மாலா திட்டம் முடிவடைய இன்னும் 4 ஆண்டுகள் பிடிக்கும்.. ஐசிஆர்ஏ தகவல்
டெல்லி: மத்திய அரசின் லட்சியத் திட்டமான பாரத்மாலா முதல் நிலை திட்டம் கொரோனா நோய் தொற்று லாக்டவுனால் 4 ஆண்டுகள் தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத்மாலா திட்டம் என்பது மத்திய அரசின் லட்சிய திட்டமாகும். அதாவது சாலை மேம்பாட்டு செயல்திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இந்த திட்டமானது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப் செல்லும். பின்னர் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக சென்று சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் வழியாக இந்தியா- மியான்மர் எல்லை வரை செல்கிறது.
இந்த திட்டத்திற்கு 500 பில்லியன் டாலர் செலவு செய்யப்படுகிறது. இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
38 ஆயிரம் கி.மீ கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2022ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐசிஆர்ஏ) தெரிவித்துள்ளது.
இந்தியா சுய சார்பாக மாறுவது அவசியம்.. தொழில் வர்த்தக சபை ஆண்டுவிழாவில் மோடி உரை
இதுகுறித்து ஐசிஆர்ஏவின் துணைத் தலைவர் சுபம் ஜெயின் கூறுகையில் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி 16,219 கி.மீ. தூரம் நிலுவையில் இருக்கிறது. அதாவது இது 47 சதவீதமாகும். 2021-ஆம் ஆண்டு 3000 முதல் 3200 கி.மீ. வரை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்குள் 10 முதல் 15 சதவீத பணி முடிக்கப்பட்டு 2026-ஆம் ஆண்டு திட்டம் முடிவடையும் என்றார்.