இளைஞர்களே.. அதிக அளவில் திரண்டு வந்து வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்!
டெல்லி: இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
5 மாநில தேர்தல்
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
விறுவிறு வாக்குப்பதிவு
அதே வேளையில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.இந்த மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா தொற்று பயமுறுத்திய போதிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
மோடி வேண்டுகோள்
இந்த நிலையில் இளைஞர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு வெளியிட்ட மோடி கூறுகையில், ' அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.
இளம் வாக்காளர்கள் திரள வேண்டும்
இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக வாக்குப்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிக அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மோடி கூறினார்.
தமிழில் மோடி டுவிட்
இதே போல் தமிழில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ' தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் மோடி தெரிவித்துளளார்.