வாரணாசியிலேயே மீண்டும் களம் இறங்குகிறார் பிரதமர் மோடி?
டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்க நேற்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜக தலைமை அலவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உட்பட மூத்த அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்த வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்விலும் பாஜக இம்முறை புதிய விதிகளை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. அதிக வயதுடையவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதோடு வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு நிறுத்தப்படும் தொகுதியில் அந்த வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு ஆகியவை குறித்து பரிசீலித்தே முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி!
கடந்த மக்களவை தேர்தலில் மோடி இரு மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டார். குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டவர் இரு தொகுதிகளிலும் வென்றார், அதன் பின்னர் வதோதரா தொகுதியை ராஜினாமா செய்தார், இந்த நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடமாட்டார் என பாஜக வட்டாரங்கள் கூறி வந்தன.
உத்திரப் பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. வரும் கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை. அதோடு உ.பி மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக கச்சை கட்டி கொண்டு கூட்டணி அமைத்துள்ளன. ஆகவே அவர் தொகுதி மாறியே போட்டியிடுவார் என்றே உ.பி மாநில பாஜகவினர் கூறி வந்தனர். வாரணாசிக்கு பதிலாக ஓடிஸா மாநிலத்தில் உள்ள பூரி தொகுதியில் மோடி களமிறங்க கூடும் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவது என்று முடிவு
செய்யப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தின் முடிவுப் படி தற்போது அவர் இந்த தொகுதியில் மட்டுமே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இரண்டாவது தொகுதியாக ஓடிஸா மாநிலம் பூரித் தொகுதியை தேர்வு செய்வார்களா என்பது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த முறை மோடி வாரணாசியில் போட்டியிட்ட பிறகு உ.பி யில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.