இனி ஈசி ஊசி.. நரம்பை கண்டறிய வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்.. "அப்பாடா.. இனி கை பஞ்சர் ஆகாது"
டெல்லி: உடலில் நரம்புகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவரையுமே நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
இதனால் நரம்புகளை தேடி தேடி தேவையில்லாமல் ஊசியால் குத்தப்படும் துன்பம் முடிவுக்கு வந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்தில் பல புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருந்தாலும், இதுபோன்ற அடிப்படை விஷயங்களுக்கான கண்டுபிடிப்புகளும் அதிக அளவில் வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவத்துறையின் அசுர வளர்ச்சி
மருத்துவத்துறையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது சாதாரணமானது அல்ல. ஒருகாலத்தில், கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் எல்லாமல் இன்று மருத்துவத்துறையில் சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆபத்தான அறுவை சிகிச்சைகள் என சொல்லப்பட்டதெல்லாம், இன்று ஒருசில மணிநேரங்களில் எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்படுகின்றன. இவை அனைத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ரணம் நிறைந்த நரம்பு ஊசி..
அதே சமயத்தில், நோயாளிகள் அன்றாடம் சந்திக்கும் சில அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்பங்கள் இன்னும் வரவில்லை. குறிப்பாக, நரம்பு ஊசி செலுத்துவதும், குளுக்கோஸ் ஏற்றுவதும் சாதாரணமான நடைமுறைதான். ஆனால், பெரும்பாலானோருக்கு கைகளில் நரம்புகள் எளிதில் தென்பட்டு விடாது. இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் கைகளில் தொடர்ந்து ஓங்கி அடிப்பதை பார்த்திருப்போம். அப்படியும் நரம்புகள் கிடைக்கவில்லை என்றால், தோராயமாக பல இடங்களில் ஊசியால் குத்தி குத்தி அதன் பிறகு நரம்பில் ஊசி செலுத்தப்படும். இதனால் நோயாளிகள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல.

அசத்தல் கண்டுபிடிப்பு
ஆனால், இனி இந்த அவஸ்தை தேவையில்லை. உடலில் நரம்புகளை எளிதில் கண்டறியும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, ஒருவருக்கு நரம்பு ஊசி செலுத்த வேண்டும் என்றால் அவரது கையில் ஒரு பிரத்யேக பச்சை நிற ஒளி பாய்ச்சப்படும். அடுத்த நொடியே, அவரது கையில் உள்ள நரம்புகள் மட்டும் தனித்தனியாக தெரியும். பின்னர் ஏதேனும் ஒரு நரம்பில் ஊசி செலுத்தினால் போதும்.

இந்தியாவிலும் வந்துவிட்டது..
இது சாதாரணமானதாக தெரிந்தாலும், மிகவும் தேவையான அத்தியாவசியமான கண்டுபிடிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே நோய் தாக்கத்தால் மனதளவில் நொறுங்கி போயிருக்கும் நோயாளிகளை, உடலளவிலும் ரணப்படுத்தும் செயலாக இந்த நரம்பு ஊசி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது இதிலிருந்து நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் வந்துவிட்டதாகவும், படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications