கோவாவில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. NewsX-Polstrat கருத்து கணிப்பு.. காங்கிரஸ் எப்படி?
டெல்லி: கோவா மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று NewsX-Polstrat கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் சிறிய மாநிலமான கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
'2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு'.. நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சூளுரை!
பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த முறை கோவாவில் அதிக இடங்களை வென்றபோதும் காங்கிரசுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ராஜதந்திரத்தால் காங்கிரசை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கிவிட்டு ஆட்சியில் அமர்ந்தது பாஜக. இந்த முறை இதில் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பதில் துடியாய் உளள்து.
பாஜக ஆட்சி அமைக்கும்
மறுபுறம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகியவை போட்டி அளிக்க தயாராக உள்ளன. தேர்தலுக்கு முன்னதாக இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று கருத்து கணிப்புகள் வலம் வருவது வழக்கம். இந்த நிலையில் NewsX-Polstrat இன்று புதிய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாஜக இந்தமுறை அதிக மெஜாரிட்டி பெற்று கெத்தாக ஆட்சியில் அமரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தும்
அதாவது கோவா சட்டசபைக்கு மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 21 முதல் 25 வரையிலான இடங்களை பிடித்தது அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் 4 முதல் 6 இடங்களையே பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 9 இடங்கள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் 2 முதல் 5 இடங்களை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. .
மக்கள் விரும்பும் முதல்வர் யார்?
பாஜக 35.6% வாக்குகளை பெறும் என்றும் காங்கிரஸ் 20.1% வாக்குகளை பெறும் என்றும் கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. இது ஒருபுறமிருக்க காங்கிரசை விட ஆம் ஆத்மி 23.4% வாக்குகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியால் உங்கள் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு 30.91% பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். கோவாவில் நீங்கள் யார் முதல்வராக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு கோவா முதல்வராக இருக்கும் பிரமோத் சாவந்த் என்று 40% பேரும், காங்கிரசின் திகம்பர் காமத் என்று 30.91% பேரும், மற்றவர்கள் என்று 29.09% பேரும் பதில் கூறியுள்ளனர்.