பெகாசஸ்: ஆணவமாக இருக்கும் மத்திய அரசு- அமித்ஷா மவுனத்தை கலைக்க வேண்டும்- எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு ஆணவப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தாக வேண்டும் என்றும் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தி உள்ளனர்.
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக செல்போன்கள் முடக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்ட நிகழ்வுகள் உலக நாடுகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் என பல நூறு பேரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.
இது அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் பெகாசஸ் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.;பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு கனத்த மவுனத்துடன் இருக்கிறது.
பெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி
மத்திய அரசு நிலை
மத்திய அரசைப் பொறுத்தவரையில் பெகாசஸ் ஒட்டு கேட்புக்கும் தங்களுக்கும் தொடர்பும் இல்லை என்கிற ஒற்றை பதிலை திரும்ப திரும்ப சொல்கிறது. அப்படியானால் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஹேக் செய்து ஒட்டு கேட்டது யார்? என விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இஸ்ரேலின் ஆயுதம்
பெகாசஸ் ஸ்பைவேர் என்பதை அரசுகளுக்குதான் இஸ்ரேல் வழங்குகிறது. இந்த ஸ்பைவேர், பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கும் ஒரு ஆயுதம். அதாவது பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க சந்தேகத்துக்குரிய செல்போன்களை ஹேக்செய்து சதி விவரங்களை கண்டறிவதற்கான ஒரு ஆயுதமாகத்தான் இது பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் தேசத்தின் குடிமக்களை ஒட்டு கேட்க பெகாசஸ் ஸ்பைவேரை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதனால்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் தர வேண்டும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
மாநில அரசுகள் கவிழ்ப்புகள்
அதேபோல் கர்நாடகா, புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்த அரசியல் ஆதாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஸ்பைவேர் காரணமாக இருந்திருக்கிறது என்பதும் குற்றச்சாட்டு. இப்படி எத்தனையோ குற்றச்சாட்டுகள் அணிவகுத்து நின்றபோதும் மத்திய பாஜக அரசு தரப்பில் விரிவான எந்த விளக்கமும் இல்லை; நாடாளுமன்ற விவாதங்களுக்கும் அனுமதி இல்லை என்கிற நிலைதான் உள்ளது.
ஓரணியில் 14 எதிர்க்கட்சிகள்
இதனையடுத்தே டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் மொத்தம் 14 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். பெகாசஸ் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்பது எனவும் அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளி, துமளி நீடித்து கொண்டிருக்கிறது. ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி இருந்தனர்.
மத்திய அரசு அவதூறு
இந்நிலையில் 14 எதிர்க்கட்சிகள் டெல்லியில் நேற்று கூட்டறிக்கை வெளியிட்டன. அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதாக மத்திய பாஜக அரசு அவதூறு பரப்பி வருகிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்; மத்திய அரசு பதில் தர வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் மத்திய அரசுதான் ஆணவத்துடனும் பிடிவாதமாகவும் நடந்து வருகிறது.
Recommended Video
விவாதம் நடத்த முன்வர வேண்டும்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதால்தான் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும். இந்த பிரச்சனைக்கு உரிய சுமூகத் தீர்வு காண்கிற பொறுப்பும் மத்திய பாஜக அரசுக்குதான் இருக்கிறது. பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விவாதம் நடத்தவே எதிர்க்கட்சிகள் கோருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இந்தப் போக்கை கைவிட்டுவிட்டு நாடாளுமன்ற இரு சபைகளிலும் மத்திய அரசு விவாதம் நடத்த முன்வர வேண்டும். பெகாசஸ் விவகாரத்தைப் போல மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.