பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் திடீரென்று இந்தியாவில் முடக்கம்.. பின்னணி காரணம் என்ன?
டெல்லி: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்துக்கு சென்றால் சட்டரீதியான கோரிக்கையை ஏற்று ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. மேலும் ஒவ்வொரு தலைவர்களும் ட்விட்டர் உள்பட பல்வேறு வலைதளங்களில் கணக்கு துவங்கி முக்கிய விபரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. பாகிஸ்தானில் GovtofPakistan எனும் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. இந்த பக்கத்தின் அந்த நாட்டின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தான் GovtofPakistan எனும் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பக்கத்தில், ‛‛சட்டப்ரீதியான கோரிக்கையை ஏற்று இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது'' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அரசின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு முடக்கத்தின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதா அல்லது வேறு யாரெனும் உள்ளனரா? என்ற சந்தேகம் உள்ளது. தற்போது ஒவ்வொரு நாட்டிலும் சமூக வலைதள பயன்பாட்டுக்கு என்று அந்தந்த நாட்டினர் விதிகளை வகுத்துள்ளனர்.
இந்த விதிகளுக்கு உட்பட்டே சமூக வலைதள நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மேலும் நாட்டுக்கு எதிராக யாரெனும் தவறான தகவல்களை பரப்பினால் அந்த பதிவுகளை நீக்கம் செய்ய ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நாடுகள் கோரிக்கை வைக்க முடியும்.
இந்த நடைமுறை இந்தியாவிலும் உள்ளது. அதன்படி பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதா, ஒருவேளை அப்படி இருப்பின் அதன் பின்னணி என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் தற்போதைய ட்விட்டர் பக்கம் முடக்கம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் நிலவி வருகிறது.