சினிமா தியேட்டர் மாதிரி இருக்கு.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. கனிமொழி, ஜோதிமணி விளாசல்
டெல்லி: நாடாளுமன்றத்திற்குள் எம்.பிக்கள் மொபைல் போன் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் பார்வையாளர் மாடத்திற்குள் உள்ளே எப்படி மர்ம நபர்கள் வந்தார்கள் என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஜோதிமணி எம்.பி கூறியுள்ளார்.
லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நாடாளுமன்றம் தாக்குதல் நடந்த தினம். கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றம் தாக்குதல் நடைபெற்றது.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றபோது, தங்கள் கடமையை நிறைவேற்றி உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பலகோடி செலவு செய்து கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கட்டிடம் என்று பெருமையுடன் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு நிறைந்த லோக்சபாவிற்குள் இன்று கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரண்டு பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்தனர். கைகளில் புகை குண்டுகளை வைத்திருந்தனர். இதனையடுத்து எம்.பிக்கள் பதற்றமடைந்து அவர்களை பிடிக்க முற்பட்டனர். செக்யூரிட்டிகள் விரைந்து வந்து இரண்டு பேரை கைது செய்தனர்.
புகையோடு நெடியும் வீசிய குண்டுகளை இரண்டு பேரும் வீச முற்பட்டனர். அத்துமீறிய நபர்கள் சர்வாதிகாரம் ஒழிக என்று கூறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எத்தனையோ சோதனைகளை தாண்டித்தான் பார்வையாளர்களை உள்ளே அனுப்புகின்றனர். வரவேற்பு அறையில் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். அதே நேரத்தில் ஷூவை கழற்றி சோதனை செய்யப்படுவதில்லை என்பதால் அதனை பயன்படுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீச முற்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி பேசிய கனிமொழி எம்.பி, புது நாடாளுமன்றம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர் மாடத்தில் இருந்து ஈஸியாக குதித்து விட்டார்கள். இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கும். அப்படி இருந்த நிலையில் இன்றைக்கு அத்துமீறல் நடந்துள்ளது. யாரோ 2 பேர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
நம்முடைய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை. ஆனால் பிரதமர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. நிச்சயமாக மத்திய அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக்கொண்டார்.
இதே சம்பவம் குறித்து பேசிய ஜோதிமணி எம்.பி, லோக்சபாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக கூறினார். பழைய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பானதாக இருந்தது. புது நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆதார் கார்டு இருந்தால்தான் பாஸ் கிடைக்கும். 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பாஸ் வாங்கி விட வேண்டும். பல பாதுகாப்புகளை கடந்துதான் உள்ளே போக முடியும் என்றார்.
மொபைல் போன் கூட கொண்டு போக முடியாத நிலையில் இவர்கள் எப்படி கலர் குச்சிகளை கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சினிமா தியேட்டர் போல இருப்பதாகவும் ஜோதிமண் எம்.பி கிண்டலடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications