"லீவ் போடாமல்.. நாடாளுமன்றத்திற்கு கரெக்டா வரணும்..!" புதிய எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
டெல்லி: புதிதாகப் பதவி ஏற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.
புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது. அதில் புதிய எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எம்பி தேர்தல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவின் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு இரு இடங்களும் கிடைத்தது.

தமிழ்நாடு
திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் எம்பி ஆனார். அதிமுக சார்பில் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர். தர்மர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய எம்பிக்கள்
இதேபோல நாடு முழுவதும் இருந்து 57 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் மாநிலங்களவையில் எம்பியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு முன்னிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாஜகவின் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் எனப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பாஜக எம்பிக்களும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

பிரதமர் அட்வைஸ்
அதைத் தொடர்ந்து நேற்று மாலை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அவர் மாநிலங்களவை எம்பிக்களின் பொறுப்புகளை விளக்கினார். நாடாளுமன்றத்திற்கு முறையாக வர வேண்டும் என்றும் வார்த்தைகள் கவனமாகத் தேர்வு செய்து பேச வேண்டும் என்றும் பிரதமர் மோடி அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.

முக்கியம்
நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்களின் வாக்கு முக்கியமானதாக இருக்கும். குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கும் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications