பிரதமர் மோடி மார்ச்சில் இலங்கை பயணம்? மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?
டெல்லி: வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான BIMSTEC மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மார்ச் மாதம் இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பது எதிர்பார்ப்பு. அதேபோல் ஈழத் தமிழருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பை ஏற்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை ஜி.எல்.பீரிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புகளின் போது இருதரப்பு உறவுகள், இலங்கைக்கான கடனுதவிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இலங்கை திவாலாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாதான் அடுத்தடுத்து இலங்கைக்கு பெருமளவு கடனுதவி வழங்கி வருகிறது.
இதற்கு பிரதிபலனாக அண்மையில் திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுக்கு இலங்கை தாரை வார்த்தது. அதேபோல் மன்னார் வளைகுடா பகுதியில் சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த மெகா காற்றாலை மின்திட்டங்களை இலங்கை ரத்து செய்தது. இதை ஜீரணிக்க முடியாத சீனா தற்போது தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையில் தலையீட்டை தொடங்கி உள்ளது. இதனால் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி இந்தியாவுக்கு கொடுக்கப்படுவதை எதிர்த்து இதேபோல் சீனாவின் தூண்டுதலில் சிங்கள தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் தமிழகம், ஈழத் தமிழர் மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண்பது குறித்து இந்திய தரப்புடன் இலங்கை அமைச்சர் பீரிஸ் விவாதித்துள்ளார். மேலும் வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான BIMSTEC அமைப்பின் மாநாடு மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க கூடும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஜி.எல்.பீரிஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது ஈழத் தமிழ் தலைவர்களை சந்தித்து பேசக் கூடும் என தெரிகிறது. இலங்கையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட உள்ளது. இந்த அரசியல் சாசனம் ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. இது ஈழத் தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட 13-வது அரசியல் சாசன திருத்தம் அதாவது மாகாண சபைகளை பாதுகாக்கிற உரிமையையாவது காப்பாற்ற வேண்டும் என்பது ஈழத் தமிழ் தலைவர்களின் எதிர்பார்ப்பு. இது குறித்தும் பிரதமர் மோடி ஈழத் தமிழ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.