அன்புக்குரியவர்களை இழந்து விட்டோமே.. கொரோனா பற்றி பேசும்போது உடைந்துபோன மோடி.. கலங்கிய கண்கள்!
டெல்லி: கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் பற்றி பேசும்போது பிரதமர் நரேந்திரமோடி தன்னையுமறியாமல் கண்கலங்கி உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுக்க மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகி உள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை எட்டவுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
கொரோனா 2வது அலை ஜூனில் முடிவுக்கு வரும்.. 3வது அலை எப்போது? மத்திய நிபுணர் குழு அறிவிப்பு
மோடி தொகுதி வாரணாசி
வாரணாசி தொகுதியில் இருந்துதான் நரேந்திர மோடி கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தனது தொகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதில் மோடி பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மோசமான அலை
நரேந்திர மோடி தனது பேச்சின்போது, மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். பல முனைகளில் இருந்தும் நோய்த்தொற்று தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. நாம் அதை எதிர்கொண்டு வருகிறோம். கொரோனா இறப்பு விகிதம் இரண்டாவது அலை தாக்கத்தின் போது மிக அதிகமாக இருக்கிறது நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலகட்டமும் அதிகரித்துள்ளது என்று நரேந்திர மோடி அப்போது குறிப்பிட்டார்.
கண் கலங்கிய மோடி
மேலும் மோடி பேசுகையில், இந்த வைரஸ் அன்புக்கு உரியவர்கள் பலரை நம்மிடமிருந்து பறித்து சென்று விட்டது.. அவர்களுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.. இழப்புகளை சந்தித்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தபோது சில நிமிடங்கள் பேசுவதை விட்டுவிட்டு மௌனமாக இருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. வார்த்தைகளில் நடுக்கம் தென்பட்டது. இதன் பிறகு சுதாரித்துக்கொண்டு தனது உரையைத் தொடர்ந்தார் நரேந்திர மோடி.
|
மத்திய அரசு மெத்தனம்
கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்த போதிலும் கூட மோடி அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது போன்றவை காரணமாக, நோய் தொற்று மிக மோசமாக போய், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது என்கின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள். பல சர்வதேச மருத்துவ இதழ்களும் கூட மோடி அரசின் மெத்தனம்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறியுள்ளன.
படுக்கை வசதிகள்
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருப்பது, ஆக்சிஜன் வசதி இல்லாமல் இருப்பது, உள்ளிட்டவற்றுக்கு மோடி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது காரணம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இந்த நிலையில்தான் நிலவரத்தின் தன்மையை நரேந்திர மோடி புரிந்து கொண்டிருக்கிறார், மிகவும் கவலையுடன் காணப்படுகிறார் என்பதை இந்த வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.