அநீதிக்கு எதிராக போராடியவர் “இமாம் ஹுசைன்”.. நபிகள் நாயகத்தின் பேரனை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
டெல்லி: நபிகள் நாயகத்தின் பேரன் இமான் ஹுசைன் அவர்களின் தியாகங்களை நினைவுகூரும் நாள் இன்று எனவும், அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் முஹர்ரம் என்று அழைக்கப்படுகிறது. முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 வது நாளில் ஆசுரா என்ற நோன்பை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.
ஆசுரா எனப்படும் இந்த நாட்களில்தான் இறைத் தூதரர் மூசா மற்றும் அவரை பின்பற்றிய இஸ்ரவேலர்களை காக்க இறைவன் செங்கடலின் குறுக்கே சுவரை எழுப்பினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இப்படி பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் இந்த நாளில் நடந்ததாக நம்பப்படுகிறது.
ஷியாக்கள் ஊர்வலம்
ஆனால், ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த நாளில் துக்கம் அனுசரிக்கின்றனர். இன்று ஷியாக்கள் கருப்பு நிற ஆடை அணிந்து ஊர்வலமாக சென்று கத்தி, கூர்மையான ஆயுதங்களால் தங்கள் உடல்களை கீறி ரத்தக் காயங்களை உருவாக்கிக் கொள்வார்கள். இந்த நிகழ்வு மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது.
போரில் ஹுசைன் மரணம்
இதற்கு காரணம் ஹஜ்ரத் இமாம் ஹுசைன் அவர்களின் மரணம். இமாம் ஹுசைன் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா மற்றும் மருமகன் அலி தம்பதியின் 2 வது மகனாவார். இவரது ஆதரவாளர்களின் படையினருக்கும் அப்போது ஆட்சியில் இருந்த உமைய்யாக்களின் கலிபா முதலாம் யசீதுக்கும் இடையே கர்பலா என்ற இடத்தில் போர் மூண்டது. இந்த போரில் ஹுசைன் கொல்லப்படுகிறார்.
ஷியா பிரிவு
இஸ்லாமியர்களில் ஷியா என்ற பிரிவு உருவாகுவதற்கு இந்த போர் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்பலா போரில் கொல்லப்பட்ட இமாம் ஹுசைன் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஷியாக்கள் முஹர்ரம் அன்று தங்கள் உடல்களில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர்.
பிரதமர் மோடி ட்வீட்
இந்த நிலையில் முஹர்ரமை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இமாம் ஹுசைனை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "இன்று ஹஜ்ரத் இமாம் ஹுசைன் அவர்களுடைய தியாகங்களை நினைவுகூரும் நாள். சத்தியத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்காக ஹுசைன் நினைவுகூரப்படுகிறார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்." என்று பதிவிட்டு உள்ளார்.