இந்தியாவின் அடுத்த அடிதான் முக்கியம்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்.. இதுதான் காரணம்!
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியா அடுத்து எடுத்து வைக்க போகும் அடிதான் உலக அரசியலில் மிக முக்கியமான ஒரு அடியாக இருக்கும்.
மேலே குறிப்பிட்ட விஷயத்தை புரிந்து கொள்வதற்கு முன் சவுதி அரேபியா - ஈரான் இடையே நிலவும் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். சவுதிக்கும் ஈரானுக்கு இடையில் பல ஆண்டுகளாக வரலாறு நெடுக பிரச்சனை இருந்து வருகிறது.
சன்னி - ஷியா என்ற பிரிவினை மட்டும் பிரச்சனை கிடையாது, இஸ்லாமிய நாடுகளில் யார் டான், எண்ணெய் ஏற்றுமதியில் யார் கிங், ஆசியாவிற்கு யார் அண்ணன் என்று பல பட்டங்களை பெறுவதற்காக இந்த சண்டை நடந்து வருகிறது.
பல வருட பிரச்சனை
சவுதி சன்னி நாடு, அதே சமயம் ஈரான் ஷியா முஸ்லீம்கள் நிறைந்த நாடு. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் இத்தனை வருடங்களாக கடுமையான பகை இருந்து வருகிறது. ஈரானில் நடக்கும் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு சவுதிதான் காரணம் என்று ஈரான் அரசு பல முறை தெரிவித்து இருக்கிறது. அதேபோல் ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளுடன் சவுதியும் எளிதாக நண்பன் ஆகிவிடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கதைதான்.
இப்போது என்ன பிரச்சனை
இந்த நிலையில்தான் கடந்த புதன் கிழமை, ஈரானில் பாகிஸ்தான் எல்லை அருகே அந்த தாக்குதல் நடந்தது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ் என்ற பகுதியில் ஜெய்ஷ் அல்-அடில் என்ற அமைப்பு தாக்குதல் நடத்தியது. ரோந்து பார்த்துவிட்டு திரும்பிய ராணுவ வீரர்களின் வாகனம் மீது, வெடிகுண்டு தாங்கிய வாகனத்தை வைத்து தீவிரவாதி மோதி தாக்குதலை நிகழ்த்தினான். இதில் 27 ஈரான் ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
குற்றச்சாட்டு
இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் அல்-அடில் இயக்கம் ஒரு குழந்தை தனமான இயக்கம் என்றுதான் உலக நாடுகள் நினைத்துக் கொண்டு இருந்தது. இந்த இயக்கம் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்பட்டாலும், ஈரானின் கை நீண்டது என்னவோ சவுதியை நோக்கித்தான். சவுதிதான் இந்த தாக்குதலுக்கு பின் இருக்கிறது என்று ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானை நேரடியாக குற்றஞ்சாட்டியது.
இந்தியா பிரச்சனை
சரி இதில் இந்தியா எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழலாம். ஈரானில் தீவிரவாத தாக்குதல் நடந்த மறுநாள்தான் இந்தியாவில் புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த தாக்குதல்தான் தற்போது உலக பிரச்னையை உருவாக்கி உள்ளது.
ஈரான் அறிக்கை
இரண்டு தாக்குதலும் ஒரே மாதிரி இருந்த காரணத்தால் ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்தார். இந்த பேட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவை சந்தித்த பின் அளித்த பேட்டியாகும். அதில் ''இந்தியாவும் - ஈரானும் இனி இணைந்து செயல்படும். இந்த பிராந்தியத்தில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
சவுதி பிரச்சனை
அவர் சவுதியைதான் குறிப்பிடுகிறார் என்று உலக அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சனை நேற்றுதான் வேறு வகையில் தீவிரம் அடைந்தது. நேற்று சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் சென்று இருந்தார். பாகிஸ்தானின் வளர்ச்சி பணிகளுக்காக 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை செய்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.
இரண்டு அணிகள்
இந்த ஆலோசனை காரணமாகவும், ஈரானின் இந்திய ஆதரவு காரணமாகவும் ஆசிய அரசியலில் யாருமே நினைக்காத திருப்பம் உண்டாகி உள்ளது. ஆசியாவில் புதிதாக இரண்டு அதிகாரபூர்வமற்ற அணிகள் உருவாகி உள்ளது. ஒரு அணி : இந்தியா + ஈரான், இன்னொரு அணி : சவுதி + பாகிஸ்தான். இதுதான் தற்போது உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திருப்பி இருக்கிறது.
இந்தியா என்ன முடிவு எடுக்கும்
இந்த தொடர் சம்பவங்களை அடுத்து இந்தியா என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரானுடன் செல்வது அமெரிக்கா, சவுதி என்று உலகின் பெரிய நாடுகளை பகைத்துக்கொள்வது போல ஆகும். அதேசமயம் பாகிஸ்தானுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் சவுதியுடனும் கூட்டு சேர முடியாது. இதனால் இந்தியா என்ன செய்யும்..பிரதமர் மோடி இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.