அடுத்த வருஷம் முதல்.. மாத்திரை ஷீட்களில் வருகிறது கட்டாய மாற்றம்.. "QR கோட்!" மாஃபியாவை தடுக்க ஐடியா
டெல்லி: அதிகளவில் விற்பனை செய்யப்படும் சில மருந்துகளில் 2023 ஆகஸ்டு மாதம் முதல் கியூஆர் கோடு அல்லது பார் கோடுகள் இடம்பெற்று இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. எந்தெந்த மருந்துகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது? இந்த கோட்களின் முக்கியத்துவம் என்ன? என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து மத்திய அரசு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், "மருந்து நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மருந்து பொருட்களின் கவர்களில் கியூஆர் கோடு அல்லது பார் கோடை இணைக்க வேண்டும்.
மருந்துகளின் மேல் கவரில் இந்த கோடுகள் இடம்பெற்று இருக்க வேண்டும். இடப்பற்றாக்குறை இருந்தால் இரண்டாம் தர பேக்கேஜில் அதை சேர்க்க வேண்டும்.
என்னென்ன தகவல்கள்
அந்த கோடுகளில் மென்பொருள் பயன்பாட்டுடன் தெளிவான தகவல்களை சேமிக்க வேண்டும். மருந்து குறித்த அனைத்து தகவல்கள் குறிப்பாக மருந்து மூலக்கூறுவின் பெயர், மருந்தின் பெயர், உற்பத்தி செய்பவரின் பெயர் மற்றும் முகவரி, பேட்ஜ் எண், உற்பத்தி செய்யப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், உற்பத்தி நிறுவனத்தின் உரிம எண் ஆகியவை இடம்பெற்று இருக்க வேண்டும்.
எந்தெந்த மருந்துகள்?
மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொதுவான மருந்துகளான அலெக்ரா, அசித்ரால், பெகோசுல்ஸ் கேப்சூல், கால்பால், பாண்டோசிட் டிஎஸ்ஆர், மோனோசெஃப், தைரோனோர்ம் ஆகிய மருந்துகளின் கவர்களில் கியூஆர் அல்லது பார் கோடுகள் இடம்பெற்று இருப்பது அவசியம்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏன் QR கோட்?
நோயாளிகள் தாங்கள் வாங்கும் மருந்துகள் பாதுகாப்பானவையா, போலியானவையா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்கு இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எதிர்காலத்தில் மேலும் சில மருந்துகளில் கியூஆர் அல்லது பார் கோடுகளை சேர்ப்பது கட்டாயமாக்கப்படலாம் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
போலி மருந்துகள்
பல ஆண்டுகளாக சந்தையில் போலி மருந்துகள் விற்பனை என்பது நடந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிர் காக்கும் மருந்து என்று உலகளவில் விற்பனை செய்து வந்த கும்பலை பிடித்தது.
தயாரிப்பது எப்படி?
இந்த போலி மருந்து தயாரிக்கும் கும்பல் மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து கேப்சூல்களை மட்டும் வாங்கி, அதில் கஞ்சி பசையை நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர். இதனை தயாரிப்பதற்கு மிக சொற்பமான தொகையே அவர்கள் செலவிடுகின்றனர்.
குறைந்த விலைக்கு விற்பனை
ஆனால் இவ்வாறு, தயாரிக்கப்படும் இந்த கேப்சூல்கள் ஒவ்வொன்றையும் மார்க்கெட்டில் குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் விற்பனை செய்து வருகின்றனர். உண்மையில் இந்த கேப்சூல்களை வெள்ளை சந்தையில் வாங்க ரூ.2 லட்சம் தேவைப்படும்.