'இது'தான் நான் செஞ்ச பெரிய தப்பு.. சீனியர் தலைவர்களுக்கு ராகுல் கொடுத்த சிக்னல்.. அடுத்து என்ன?
டெல்லி: ராகுல் காந்திக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்புகளைத் தெரிவித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்ததன் மூலம் தான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாக ராகுல் காந்தி தற்போது பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
அதன் பின்னர் கட்சி தலைவர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கட்சியின் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், கட்சிக்கு விரைவில் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
அதிருப்தியில் மூத்த தலைவர்கள்
காங்கிரசில் ஒரு தரப்பினர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கட்சிக்குள்ளேயே இருக்கும் பல சீனியர் தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட சில தலைவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி கூறும் கருத்துகளை கபில் சிபல் மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
நான் செய்த தவறு
இந்நிலையில், இன்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இதில் ராகுல் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை இதயத்திலிருந்து பின்பற்றுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், கட்சியில் இளம் தலைவர்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவத்தை அளித்ததன் மூலம் தான் தவறு செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். கட்சிக்காக நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூத்த தலைவர்களுக்கு சிக்னல்
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வரும் ஜூன் மாதம் நடைபெறும் உட்கட்சி தேர்தலின்போது ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, அவர் மீது அதிருப்தியில் உள்ள சீனியர் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
இளம் தலைவர்களுக்கு வாய்ப்பளித்தவர்
கடந்த 2004ஆம் ஆண்டு முதன்முதலில் அமேதி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி, 2007ஆம் ஆண்டு காங்கிரசின் பொதுச்செயலாளராகவும் 2017ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பதவியிலிருந்து காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பல இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், இது கட்சியிலுள்ள சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.