டோல்கேட்டே வேண்டாம்.. பகல் கொள்ளை.. அகற்றிவிட்டு ஒருமுறை கட்டணத்தை கொண்டு வாங்க - பொங்கிய திமுக எம்.பி!
டெல்லி : நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிட்டு, வாகனங்களை பதிவு செய்யும்போதே ஒரு முறை கட்டணமாக வசூலிக்கலாம் என திமுக எம்.பி பி.வில்சன் ராஜ்யசபாவில் வலியுறுத்தியுள்ளார்.
சுங்கக்கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடைபெறுகிறது. எனவே இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி வில்சன்.
கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கிடையாது.. குஷியான அறிவிப்பு வெளியிடும் ம.பி. அரசு?
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தி.மு.க எம்.பி வில்சன் ராஜ்ய சபாவில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். சுங்கச்சாவடிகளில் நெடுஞ்சாலைக்கு முதலீடு செய்ததை விட பல மடங்கு வசூல் செய்யப்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் வில்சன்.
சிறப்புத் தீர்மானம்
ராஜ்யசபாவில் தான் கொண்டு வந்த சிறப்புத் தீர்மானத்தை முன்வைத்துப் பேசிய எம்.பி வில்சன், "நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிளும் உள்ளன. சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது.
வலுக்கட்டாயமாக கட்டணம்
வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலைகள் மற்றும் சுங்க கட்டணம் அல்லாத சாலைகள் போன்றவற்றை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
முதலீட்டை எடுத்த பின்பும்
தேசிய நெடுஞ்சாலைகளின் முதலீடுகளை முழுதும் திரும்பப் பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முழுக்க இயக்கப்பட்ட பல பகுதிகள் இன்னமும் அதிக கட்டணத்ததை வசூலித்து வருகின்றனர். அதேபோல சுங்கக்கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை கண்மூடித்தனமாக உயர்த்தப்படுகிறது. அரசு போக்குவரத்து நிறுவன பேருந்துகள் மற்றும் மற்ற இதர அரசின் வாகனங்களிடமிருந்தும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அரசின் போக்குவரத்து கழகங்கள் லாபம் ஈட்டாமல் பெயரளவிலான கட்டணங்களிலேயே இயக்கப்படுகிறது.
லாபம் ஈட்டும் நோக்கம் வேண்டாம்
ஆகையால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சுங்க கட்டண சாவடிகளிலும் உடனடியாக ஒரு தன்னாட்சி அமைப்பினைக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்களின் முதலீடுகள், சுங்க வரி மூலம் வசூல் செய்யப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்ததாரர்கள் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாக்கி தொகைகள் போன்றவற்றை தணிக்கை செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். பாக்கி இருந்தால் அவர்களின் பாக்கி தொகையை தீர்த்து விட வேண்டும். ஏனெனில், பொதுப்பயன்பாட்டு உட்கட்டமைப்பில் லாபம் ஈட்டும் நோக்கம் இருக்கக் கூடாது.
ஒரு முறை கட்டணம்
அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கு பதிலாக வாகனங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்கப்படலாம். எனவே, நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்தியய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
2 திட்டங்கள் இருக்கு
இதைத் தொடர்ந்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். இனிமேல் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை மறையும். வேறு வழியில் சுங்க கட்டணம் வசூலிக்க அரசு 2 திட்டங்களை பரிசீலனை செய்து வருகிறது. செயற்கைகோள் முறை, நம்பர் பிளேட் முறை ஆகியவற்றின் மூலம் சரியான தொகை மட்டுமே வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்படும் எனத் தெரிவித்துள்ளார்.