அடுத்தடுத்து 3 சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி
டெல்லி: கொரோனா பிரச்னையால் முடங்கியுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அடுத்தடுத்து மூன்று சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள் பழைய படி இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்றால் கடன் உதவி தேவைப்படுகிறது. அத்துடன் பொருளாதார ஊக்கம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அடுத்தடுத்து மூன்று சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி உள்ளது.
சரியான நேரத்தில் நாட்டின் முக்கியமான மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் இந்த மூன்று அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றினை இப்போது பார்ப்போம்.
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு.. மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரிப்பு.. எஸ்பிஐ அசத்தல்
5லட்சம் வரை
லாக்டவுனால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வர வேண்டும் என்றால் அவர்களுக்கு உடனடியாக போதிய பணம் தேவை. இதை உணர்ந்த எஸ்பிஐ அவசர கடன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நாட்டிலேயே எந்த ஒரு தனிநபர் கடன் திட்டத்தைவிட மிக குறைந்த வட்டியாக 10.5 சதவீத வட்டிதான் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. yona sbi ஆப்பில் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் வரை கடன் பெற முடியும். இஎம்ஐ செலுத்துவது ஆறுமாத காலத்திற்கு பிறகே ஆரம்பம் ஆகும்
வீட்டுக்கடன் தவணை குறைவு
இரண்டாவது அறிவிப்பு எஸ்பிஐ வீட்டு கடனுக்கான எம்சிஎல்ஆர் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7.40 சதவீதமாக இருந்து எம்.சி.எல்.ஆர் விகிதம் 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர் 2020 மே 10 முதல், நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகள் செலுத்தும் காலத்தைக் கொண்ட ரூ. 25 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை ரூ.255 வரை குறையும்
வட்டி அதிகரிப்பு
மூன்றாவது அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கும் வகையில் சிறப்பு டெபாசிட் திட்டம். பாரத ஸ்டேட் வங்கி குறைந்து வரும் வட்டி விகிதத்திலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் ‘எஸ்பிஐ வீகோ் டெபாசிட்' என்ற பெயரில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது.. இதன் மூலம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான மூத்த குடிமக்கள் டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டம் செப்டம்பா் 30 வரை அமலில் இருக்கும். ஆனால், 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மே 12-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரவுள்ளது..
வணிக கடன் அவசியம்
நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் டவங்கி நாட்டில் மக்களிடையே பணப்புழகத்தை அதிகரிக்க இந்த மூன்று திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளது. இதில் அவசர கடன் திட்டம் வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும் வணிகர்களுக்கு அளிக்கப்படும் வணிக கடன் திட்டத்தை சலுகையுடன் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூத்த குடிமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கையில் உள்ள பணத்தை எஸ்பிஐ எப்டியில் போட்டால் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பதால் அதில் போட ஆர்வம் காட்டுவார்கள். வீட்டுக்கடனிலும் பாரத ஸ்டேட் வங்கி தளர்வு அளித்திருப்பதால் பொதுமக்களுக்கு இது லாக்டவுன் சமயத்தில் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியின் பாணியில் மற்ற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன் வழங்குவதில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலீடுகளை ஈர்க்க வட்டியை உயர்த்துவது, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தனிநபர் கடன் மற்றும் வணிக கடன் வழங்குவது உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.