விவசாயிகள் படுகொலை.. விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் கறுப்புக் கொடி பேரணி நடத்திய போது ஜீப்பை ஏற்றி விவசாய படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் இந்த படுகொலைகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அஜிஸ் மிஸ்ரா இதனை மறுத்து வருகிறார். மேலும் ஆஷிஸ் மிஸ்ரா மீது உ.பி. போலீசார் கொலை வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் படுகொலை: 'கிரிஸ்டல் கிளியராக' வீடியோ இருக்குதே.. நீதி கேட்கும் பாஜக எம்.பி. வருண் காந்தி
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா
லக்கிம்பூர் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஜய் மிஸ்ரா நேற்று சந்தித்து பேசினார். அப்போது லக்கிம்பூர் படுகொலை சம்பவங்கள் குறித்து அவர் அமித்ஷாவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு
இந்த படுகொலைகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர். பின்னர் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று இந்த வழக்கை விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு விளக்கம்
இன்றைய விசாரணையின் போது, லக்கிம்பூர் படுகொலைகள் சம்பவம் தொடர்பாக யார் யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உ.பி. மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து லக்கிம்பூர் படுகொலைகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய உ.பி. மாநில அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் நாளை தாக்கல் செய்யும் விரிவான விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் தொடர்பாக யார் யார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்கிற விரிவான விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.