ஊழல் வழக்கு:டெல்லி வக்கீல் வைத்து தண்ணி காட்டும் எஸ்.பி.வேலுமணி! தவிடுபொடியாக்க போராடும் தமிழக அரசு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் அவருக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தின் அசைக்க முடியாத ஆகப்பெரும் தூணாக இருந்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்தது; இதற்கு எஸ்.பி.வேலுமணிதான் காரணம் என்பது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு.
ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என வாதிடுகிறது எஸ்.பி.வேலுமணி தரப்பு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில், தமக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை வழங்கப்பட்டுவிட்டது; ஆனால் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆதாரம் இல்லை என்ற முதல் கட்ட அறிக்கைக்கு எதிராக அரசு, மனுதாரர்கள் வழக்கும் தொடரவில்லை என தெரிவித்திருந்தார்.
'யார்கிட்ட..?’ சைலண்டா பதில் சொன்ன வேலுமணி.. '9 பேர்’.. சான்ஸே இல்ல.. அணிவகுத்த எம்.எல்.ஏக்கள்!
மத்திய அரசு வக்கீல் ராஜூ ஆஜர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணியின் மனு விசாரணைக்கே ஏற்புடையது அல்ல என வாதிட்டார். அத்துடன் இந்த மனுவை ஒரு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றார். அத்துடன் எஸ்.பி.வேலுமணி தரப்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகவும் சண்முகசுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக அரசு ஆட்சேபனை
இது தொடர்பாக வாதிட்ட தமிழ அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனை நடத்திய வருமான வரித்துறைக்காக வழக்குகளில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ராஜூ. அவர் எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பினார். ஆனால் மத்திய அரசின் அனுமதியுடன் தாம் ஆஜராவதாக வழக்கறிஞர் ராஜூ நியாயப்படுத்தி வாதிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ, மத்திய அரசு அனுமதியுடன் ஆஜராகி உள்ளார்; மத்திய அரசின் அந்த அனுமதி திரும்ப பெறப்படவில்லை. ஆகையால் ராஜூ ஆஜராவதை எதிர்க்கும் தமிழக அரசின் ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 9-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்- நாளை விசாரணை
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆவராவதை எதிர்த்த தமிழக அரசின் ஆட்சேபணையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.