குடும்ப அரசியல்.. இதெல்லாம் தப்புங்க.. அம்பேத்கரே ஏற்க மாட்டார்.! திடீரென ரூட்டை மாற்றும் சசி தரூர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் நெருங்கும் நிலையில், சசி தரூர் இப்போது கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய அக்.17இல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.
ஒரு பக்கம் மல்லிகார்ஜுன கார்கே தலைவர் தேர்தலில் களமிறங்கி உள்ள நிலையில், மறுபுறம் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்.
விளம்பரத்திற்காக சட்டையை கிழிக்க மாட்டோம்.. மக்கள் பிரச்சினையை மட்டுமே பேசுவோம்.. செல்லூர் ராஜு!
சசி தரூர்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரு தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே டெல்லியில் நேரு அருங்காட்சியகத்தில் "அம்பேத்கர்: எ லைஃப்" என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சசி தரூர் குடும்ப அரசியல் குறித்தும் தலைமை குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
ஒரே குடும்பம்
டெல்லியில் பேசிய சசி தரூர், "சாதிய அமைப்பின் தர்க்கத்தை அம்பேத்கர் ஒரு போதும் ஏற்கவில்லை. எனவே, அரசியல் தொடங்கி எந்தவொரு இடத்திலும் ஒரே குடும்பம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.. அம்பேத்கர் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்றாலும் கூட அவர் இதைத் தான் சொல்வார் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் இருக்காது.
ஏற்க மாட்டார்
ஒரு கட்சியின் தலைமை பொறுப்பு குடும்ப பரம்பரைக்குச் செல்ல வேண்டும் என்பதை அவர் ஏற்று இருக்க மாட்டார். அதைக் கடுமையாக விமர்சித்திருப்பார். தேர்தல் உள்ளிட்ட பிற வழிமுறைகளைப் பின்பற்றியே தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றே அவர் கூறி இருப்பார்" என்று சசி தரூர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், சசி தரூர் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
புத்தக வெளியீட்டு விழா
தொடர்ந்து புத்தகத்தைப் பற்றிப் பேசிய திரு தரூர், அம்பேத்கரின் வாழ்க்கையில் சந்தேகத்திற்கு இடமின்றி நாடகமும் துன்பங்களும் உள்ளன என்றும் அதை இந்த புத்தகம் தெளிவாக விளக்குவதாகவும் தெரிவித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மதன் பி லோகூர், முன்னாள் ராஜ்யசபா எம்பி பால்சந்திர முங்கேகர் மற்றும் வழக்கறிஞர் கருணா நுண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரே ஆள்
இதில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர், "இந்திய அரசியலமைப்பை அம்பேத்கர் ஒரே ஆளாக எழுதினார். வரைவு குழுவில் ஏழு பேர் இருந்தனர். இருப்பினும், அதில் ஒருவர் காலமானார். மற்றொருவர் அமெரிக்காவிற்கு ஒரு பணிக்காக அனுப்பப்பட்டார். மற்ற இருவருக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டன. இதனால் அம்பேத்கர் தனித்து இந்த வேலையைச் செய்தார். இதையெல்லாம் தாண்டியும் அவர் சிறப்பான அரசியலமைப்பை நமக்கு உருவாக்கித் தந்து உள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
முக்கியம்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று கூறும் நிலையில், நிர்வாகிகள் பலரும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் டெல்லி ஆதரவு இருப்பதாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக சசி தரூருக்கு பெரும்பாலான இடங்களில் முறையான வரவேற்பு கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் அவர் இப்படியொரு கருத்துச் சொல்லி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.