கொரோனா பீதி.. 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி - மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
டெல்லி: சீனாவில் பரவி வரும் கொரோனா இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான உலக நாடுகளில் குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, மருத்துவ நிபுணர்கள் இதை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவ நிபுணர்களின் இந்த கோரிக்கையை மத்திய சுகாதாரத் துறை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
தீவிரமடையும் கொரோனா கட்டுப்பாடுகள்
சீனாவில் கொரானோ பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் உலக நாடுகள் உஷார் ஆகியுள்ளன. குறிப்பாக, சீனாவுக்கு மிக அருகே அமைந்திருப்பதால் இந்த விஷயத்தை இந்தியா மிக எச்சரிக்கையாகவே அணுகுகிறது. மேலும், சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றுகள் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மாஸ்க் அணிதல், விமான நிலையங்களில் கொரோனா சோதனை என 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலைமையை, இந்தியாவில் படிப்படியாக பார்க்க முடிகிறது.
குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி
அது மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசு துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ளுமாறும், இதுவரை தடுப்பூசியே போடாதவர்களை விரைவில் ஊசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில், 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்களுக்கும் கொரோனா ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"குழந்தைகளையும் தாக்குகிறது"
தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பானில் பரவி வரும் உருமாறிய கொரோனா, குழந்தைகளையும் தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் மத்திய அரசிடம் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஆலோசனை
இதனிடையே, கார்பேவாக்ஸ், கோவாக்ஸ், கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே குழந்தைகளை தவிர பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, இந்த முறை குழந்தைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்களின் இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.