ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதியா? இன்று டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டம்!
டெல்லி: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு நிலவும் நிலையில் இன்று அம்மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 62 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜகவுக்கு 8 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர்.
பிற மாநிலங்களைப் போல டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க வேண்டுமானால் அக்கட்சி இரண்டாக பிளவுபட வேண்டும்; குறைந்தபட்சம் 40 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ வேண்டும். இருந்தபோதும் பாஜக இத்தகைய முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்பது ஆம் ஆத்மியின் புகார்.
டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே, கட்சியை இரண்டாக உடைத்துவிட்டு பாஜகவில் இணைந்தால் தம் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக பேரம் பேசினார்கள் என கூறி பரபரப்பை கிளப்பினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ10 கோடி, ரூ20 கோடி என பாஜக பேரம் பேசுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட்:முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ.பதவி பறிப்பு? புதிய சி.எம். லாலு ஸ்டைலில் மனைவி கல்பனா?
இந்நிலையில் திடீரென ஆம் ஆத்மி கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் தொடர்பு எல்லைக்குள் அப்பால் அதாவது பாஜகவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டினார். அத்துடன் காந்தி நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார் கெஜ்ரிவால்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்- தாமரை திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. மகாராஷ்டிரா, கோவா போல டெல்லியில் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுகிறது பாஜக. இதர மாநிலங்களில் ஆட்சிகளைக் கவிழ்த்தது போல டெல்லியில் எளிதாக செய்துவிட முடியாது. 40 எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ20 கோடி என ரூ800 கோடி ஒதுக்கீடு செய்து ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளது என்றார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.