கிள்ளி பார்த்துக்கொள்ளுங்கள்.. பெட்ரோல், டீசல் மட்டுமில்லை, காஸ் சிலிண்டர் விலையும் குறைகிறது
டெல்லி: மானிய உதவி பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக நேற்று, குறைக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக அக்டோபர் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான விலை படிப்படியாக குறைந்து உள்ளது.
ஆனால் மறுபக்கம் மானியம் மற்ற எரிவாயு சிலிண்டரின் விலை சில மாநிலங்களில் ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சமையல் எரிவாயு
இந்த நிலையில்தான் நேற்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது. மானியத்துடனான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மீது 6 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. மானியமற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் உயர்வு
14.2 கிலோ மானிய எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் தற்போது ரூ. 500.90 என்ற விலையில் தற்போது விற்பனையாகிறது. மானிய சிலிண்டர் கடந்த நவம்பர் 1ம் தேதி கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது சிலிண்டருக்கு ரூ.2.94 உயர்த்தப்பட்டது. 2018ம் ஆண்டு ஜூன் முதல் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்ட காஸ் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
மானியம்
மானிய கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர் டிசம்பர் மாதத்தில் தங்களது மானியமான ரூ.308.60ஐ வங்கிக் கணக்கில் பெறுவார்கள். நவம்பர் மாதம் ரூ.433.66 என்ற அளவில் வங்கிக் கணக்கிற்கு மானியம் வழங்கப்பட்டது. அது இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
குறையும்
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை வரும் காலங்களில் இன்னும் குறையும் வாய்ப்பு உள்ளது. கச்சா எண்ணை விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் கீழே பெட்ரோலியபொருட்கள் விலையை குறைய விடாமல் மத்திய அரசு தனது வரியை உயர்த்தப்போவதாக தகவல்கள் வெளியாகி வருவதும் கவனிக்கத்தக்கது.