வெறுப்புணர்வு தூண்டும் வகையில் பேசிய வழக்கிலிருந்து யோகியை விடுவித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுத்ததையடுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2007ல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தற்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இது குறித்து அவர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது இதனையடுத்து உச்சநீதிமன்றமும் இதற்கான அனுமதியை மறுத்துள்ளது.
உபியில் புல்டோசர் நடவடிக்கைக்கு நடுவே.. யோகி படத்தை டாட்டூ போட்ட முஸ்லிம் இளைஞர்.. எங்கே தெரியுமா?
பின்னணி
தற்போது உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத் கடந்த 2007ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடந்த மொஹரம் பண்டிகையின்போது வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான 'பர்வேஸ் பர்வாஸ்' இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் யோகி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆட்சி மாற்றம்
இந்த வழக்கு குறித்து மாநில அரசின் குற்றவியல் பிரிவின் சிஐடி ஆண்டுக்கணக்காக விசாரணை நடத்தி 2015-ல் சமாஜ்வாதி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசு இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. இதனையடுத்து பாஜக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் யோகி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விசாரணை
அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த வழக்கில் தொடர்புடைய தனக்கு நெருங்கியவர்களையே யோகி தலைமையிலான அரசு கைது செய்தது. இதற்கடுத்து டெல்லி தடயவியல் சோதனை நிலையம் இந்த வீடியோவைச் சோதித்து ஆதித்யநாத் குரல்தானா என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்று கூறியது. இது இந்த வழக்கில் பெரும் திருபு முனையாக அமைந்தது. இதன் பின்னர் விசாரணை அமைப்புகள் இந்த வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டன.
தள்ளுபடி
இதற்கு அடுத்து கடந்த 2017ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. ஆனால் இந்த வழக்கில் யோகி மீது விசாரணை நடந்த கோரப்பட்ட அம்சத்தை உ.பி. அரசு நிராகரித்தது. அதன் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இதனை எதிர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.