உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட கசப்பு மருந்து பணமதிப்பிழப்பு! பிரதமர் மோடி அறிவிப்பு சாதித்தது என்ன?
டெல்லி: மத்திய பாஜக அரசின் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றான பணமதிப்பிழப்பு அறிவிப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசம் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் மிகப் பெரும் துயரத்தை எதிர்கொண்டனர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மத்திய அரசு சிலவற்றை சாதித்தும் இருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இந்தியர்களால் மறக்க முடியாத நாள்.. டிவியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இனிமேல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார். உங்களிடம் ரூ500, ரூ1,000 நோட்டுகள் இருந்தால் அதை டிசம்பர் 31-ந் தேதிக்குள் வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும் என்கிறார். கறுப்புப் பணமே இல்லாத இந்தியாவை உருவாக்கவே இந்த பணமதிப்பிழப்பு நடவ்டிக்கை என விளக்கம் தருகிறார். ஒருகணம் நாட்டு மக்களுக்கு தலை சுற்றியது.. பின்னர்தான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு புரிய தொடங்கியது. அடுத்த சில மாதங்கள், மத்திய பாஜக அரசின் கடினமான முடிவின் விளைவுகளை சாமானியர்கள் துயரத்துடன் அனுபவித்து வந்தனர்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கையில் இருந்த ரூ500, ரூ1,000 நோட்டுகளில் 99% வங்கிகளுக்கு சென்றுவிட்டன. இந்த அறிவிப்புக்குப் பின்னரான நிலைமைகள், சாதக-பாதகங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையே செல்லாது என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்பு பணம் ஒழிந்துவிட்டதா? ஒட்டுமொத்த கறுப்பு பணமும் மத்திய அரசின் கஜானாவுக்கு வந்துவிட்டதா? என்கிற கேள்விகளுக்கு விடை இல்லைதான். ஆனால் இந்திய சமூகம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இப்போது பணமில்லா பரிவர்த்தனை அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது. அதனைத் தாண்டி வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது என்கிறது மத்திய அரசு.

2018-ம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விவர அறிக்கையை பார்த்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சாதகம் என்ன என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். 2018-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெருமளவு வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டன. இந்த நோட்டுகள் எல்லாம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதால் மட்டுமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெறவில்லை. வங்கியில் செலுத்தப்படாத இத்தகைய நோட்டுகளை தகுதியில்லாதவையாக அறிவிப்பது மட்டும்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே நோக்கமா? இல்லை. இந்தியாவை வரி செலுத்தாத சமுதாயம் என்ற நிலையில் இருந்து வரி செலுத்தும் சமுதாயமாக மாற்றுவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இது பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், கருப்புப் பணத்தை ஒழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது எவ்வாறு சாத்தியமானது?
ரொக்கம் வங்கியில் செலுத்தப்படும் போது இந்த ரொக்கத்தின் சொந்தக்காரர் குறித்த நிலை தெளிவாகிறது. செலுத்தப்பட்ட ரொக்கம் அதன் சொந்தக்காரருடன் இணைத்து அடையாளம் காணப்படுகிறது. இதனையடுத்து செலுத்தப்பட்ட தொகை செலுத்தியவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா என்ற விசாரணைக்கு அது இடம் கொடுக்கிறது. இவ்வாறு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இத்தகைய விசாரணைக்கு 18 லட்சம் டெபாசிட்தாரர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பலருக்கு வரியும், அபராதமும் விதிக்கப்பட்டன. வங்கிகளில் ரொக்கத்தை செலுத்துவதால் மட்டுமே அந்தப் பணம் வரிசெலுத்தப்பட்ட பணம் என்று கருத இயலாது.

2014 மார்ச் நிலவரப்படி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சமாகும். 2017-18-ல் இந்த எண்ணிக்கை 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு மற்றும் இதர நடவடிக்கைகளின் தாக்கத்தை ஆராயும் போது வருமான வரிக் கணக்குகள் 19% லிருந்து 25%- மாக உயர்ந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையே 85.51 லட்சம் மற்றும் 1.07 கோடி ஆகும். 2018-19-ன் முதலாவது காலிறுதி ஆண்டில் தனி நபர் வருமான வரி செலுத்துவோரின் முன்கூட்டிய வரி 44.1% அதிகரித்தது. கம்பெனி வரியைப் பொறுத்தவரை இது 17.4% அதிகரித்தது. வருமான வரி வசூல் 2013-14-ல் ரூபாய் 6.38 லட்சம் கோடியிலிருந்து 2017-18-ல் ரூபாய் 10.02 லட்சம் கோடியாக உயர்ந்தது.
பணமதிப்பிழப்புக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வருமான வரி வசூல் வளர்ச்சி முறையே 6.6% மற்றும் 9%. பணமதிப்பிழப்புக்கு பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரி வசூல் வளர்ச்சி வீதம் முறையே 15% மற்றும் 19%. ஜிஎஸ்டி 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அமல்படுத்தப்பட்டது. முதலாவது ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்ட வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 72.5% உயர்ந்தது. தொடக்கத்தில் இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கையான 66.17 லட்சம் பின்னர் 114.17 லட்சமாக உயர்ந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஆக்கப்பூர்வ தாக்கம் இதுதான். முதல் இரண்டு காலிறுதி ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தை முறைபடுத்துதல் அதிகமாகியுள்ளது: வரி அமைப்புகளில் கூடுதல் பணம் சேர்ந்துள்ளது: வரி வருவாய் உயர்ந்துள்ளது: செலவினம் உயர்ந்துள்ளது: வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நேரடியாக சாமானியர்களின் வாழ்க்கையில் பலவிதமான தாக்குதல்களை தொடுத்திருக்கிறது என்பது துயரமானதுதான். அதை ஜீரணிக்க முடியாத நிலைமைதான். ஆனால் இன்னொரு பக்கம் அரசு தரப்பானது சாத்தியமான நிகழ்வுகள், சாதனைகள் நிகழ்ந்திருக்கிறது என பட்டியல் போடுகிறது.. ஆக பணமதிப்பிழப்பு என்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு கசப்பான மருந்துதான்; இதனையே இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பும் வெளிப்படுத்துகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.











Click it and Unblock the Notifications