மகாராஷ்டிரா.. பாஜக சீனியர் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமனம்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் சீனியர் எம்எல்ஏவாகும்.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு, 27ம் தேதி புதன்கிழமை, மாலை 5 மணிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது.

இதற்காக தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், காங்கிரஸின் பாலாசாகேப் தோரத் மற்றும் பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சரிசமமாக மூத்த எம்எல்ஏக்களாக உள்ளனர். இருப்பினும் 6 பேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் சட்டசபை செயலாளர் வழங்கினார்.
உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இடைக்கால சபாநாயகர் யார் என்பதை ஆளுநர் தீர்மானித்தார். இன்று மாலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, காளிதாஸ் கொலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. ஆனால் பட்னாவிஸ் இன்று மாலை திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். எனவே, நாளை அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கும் வேலைதான் காளிதாஸ் கொலம்ப்கருக்கு இருக்கும். வேறு அஜென்டா இல்லை.
முன்னதாக, ராதாகிருஷ்ணா விகே-பாட்டீல் (பாஜக), காளிதாஸ் கொலம்ப்கர் (பாஜக), பாபன்ராவ் பிகாஜி பச்புட், (பாஜக), பாலாசாகேப் தோரத் (காங்கிரஸ்), கே.சி பத்வி (காங்கிரஸ்), திலீப் வால்ஸ் பாட்டீல் (என்.சி.பி) ஆகிய 6 பேரின் பெயர்கள் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications