மேற்கு வங்கத்தில் 42 தொகுதியிலும் திரிணாமுல் தனித்து போட்டி.. மம்தா முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், 42 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து போட்டியிட திட்டமிட்டன. இதற்காக இந்தியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் குறைந்தபட்ச செயல் திட்டம் என சீராக சென்று கொண்டிருந்த இந்தக் கூட்டணி தேர்தல் பரபரப்பு நெருங்க நெருங்க கருத்து வேறுபாடு எழ தொடங்கியது.

குறிப்பாக தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறினார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றிய நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணியில் ஐக்கியமானது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் தனித்து போட்டியிடுவதாக கூறி அதிரடி காட்டினார் மம்தா பானர்ஜி.
எனினும் இந்தியா கூட்டணியில் நீடிப்போம் என்று கூறினார் மம்தா பானர்ஜ். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மியும் அறிவித்தது. அகிலேஷ் யாதவும் இதே நிலைப்பாட்டை எடுக்க முன்வந்தார். எனினும் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதனால் கூட்டணியில் சில கட்சிகள் இறங்கி வந்து தொகுதி பங்கீட்டில் கையெழுத்து இட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் தான், ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்துவிட்டது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி - காங்கிரஸ் இடையேயும் சுமூகமான தொகுதி பங்கீடு ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதேபோல மேற்கு வங்கத்தில் மீண்டும் காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததாக தகவல் வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 5 லோக்சபா தொகுதிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என மம்தா பானர்ஜி கட்சி அறிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications