விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது
டெல்லி: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் 700 முதல் 800 விவசாயிகள் வரை மாண்டு போயுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த விவசாயிகளின் போராட்டம் எதிரொலித்தன. விவசாயிகளின் இந்த போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
ஹிமாச்சல் பிரதேசம்: பாஜகவில் கலகக் குரல்- கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் மாநில துணைத் தலைவர்!
விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்நிலையில் அண்மையில் திடீரென பிரதமர் மோடி, இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாய சட்டங்களின் நன்மைகளை ஒருதரப்பினருக்கு புரியவைப்பதில் தோல்வி அடைந்துவிட்டோம். அதனால் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறுகிறோம். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த விவசாய சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும். ஆகையால் விவசாயிகள் போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
விவசாயிகள் திட்டவட்டம்
ஆனாலும் டெல்லியில் போராடும் விவசாயிகளோ, விவசாய சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும்; அத்துடன் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்; அதுவரை வீடு திரும்பப் போவது இல்லை எனவும் அறிவித்திருந்தனர்.
டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்
இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வரும் 29-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை, ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சிகளை வெளியிடுதல் உள்ளிட்ட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மீன்வளம் சார் மசோதா, சிபிஐ-அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீடிப்பது ஆகியவை தொடர்பான மசோதாக்களும் நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.