புயல் நிவாரணம்.. 2வது கட்டமாக ரூ.353.70 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!
டெல்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, மத்திய அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியுள்ளது.
கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல லட்சம் ஏக்கரில் விளைவிக்கப்பட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இன்னும்கூட, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் ரூ.15 ஆயிரம் கோடி தருமாறு கேட்டார். இதையடுத்து, மத்திய அரசு புயல் ஆய்வு பணிக்காக மத்திய குழு ஒன்றை அமைத்தது.
இதன்பிறகு, மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் எனவும் மத்திய அரசு உறுதி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications