ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம்..இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்று இந்தியா வருகை தருகிறார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள், அரசு படைகளுக்கு எதிராக முன்னேறி வரும் சூழ்நிலை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் கொரோனா விவகாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்னர் பிளிங்கனின் இந்தியாவுக்கான முதல் பயணம் இதுவாகும். ஜனவரி மாதம் ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவுக்கு வரும் அமெரிக்காவின் 3வது உயர்மட்ட தலைவராக இவர் இருப்பார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஏப்ரல் மாதம் டெல்லிக்கு வந்திருந்தார். அந்த வரிசையில் பிளிங்கன் மூன்றாவது விஐபி.
ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவலுடன் சந்திப்பு
ஆன்டனி பிளிங்கன் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்திக்க உள்ளார். புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார். இதையடுத்து அந்தோணி பிளிங்கன் குவைத் புறப்படுகிறார். இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை அவர் முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப உள்ளார்.
வெளியுறவு கொள்கை
"வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனின் வருகை உயர்மட்ட அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும், நட்பையும் தொடரவும், இந்தியா-அமெரிக்கா இடையேயான உலகளாவிய கூட்டாண்மைக்கு ஊக்கமளிக்கவும் ஒரு வாய்ப்பாகும் "என்று வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த பயணத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டீன் தாம்சன் தெரிவித்தார்."வழக்கமான அமெரிக்க-இந்தியா தொடர்புள்ள உறவுகள் தாண்டி, பாதுகாப்பான உலகத்தை உறுதிப்படுத்த இந்தியாவுடனான எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அடுத்தடுத்த பகுதிகளை கைப்பற்றி வருவதால் அரசு படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அங்குள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தாலிபான்கள் பல பகுதிகளை கைப்பற்றினர். அமெரிக்கா தனது பெரும்பான்மையான படைகளை வாபஸ் பெற்றதுடன், ஆகஸ்ட் 31 க்குள் முழு அளவில் படைகளை வாபஸ் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2 + 2 பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்கு ஒரு முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு இந்தியாவில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
4 நாடுகள் கூட்டமைப்பு
ஆஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன கடல்சார் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன இது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது எனவே இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது இது தொடர்பாக இந்த வருகையின்போது இந்தியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஜோ பிடன் அரசுடனும் நெருக்கம்
இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு துறை சார்ந்த பல முக்கிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதில் 2016 ஆம் ஆண்டில் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஆஃப் அக்ரிமென்ட் (லெமோவா)வும் முக்கியமானது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு உயர்தர தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதற்கு வழங்கும் COMCASA (தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்) இல் இரு தரப்பினரும் 2018 இல் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் அதிகரிக்கும் வகையில் BECA (அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்) செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் உயர்தர ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களைப் பகிர்ந்து கொள்ள வழி ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு பலப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்க, வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகை டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன் இந்தியா எப்படி ஒரு நெருக்கத்தை வைத்திருந்ததோ, அந்த நெருக்கத்தைப் தொடர வழி செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள் வெளியுறவுத் துறை வட்டாரத்தில்.